’இந்தியன் 2’ படம் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த லைகா!

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், கொரோனா பிரச்சினை காரணமாக இதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை.
இதற்கிடையே, ‘இந்தியன் 2’ படத்தால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால் அப்படத்தை கைவிடும் முடிவுக்கு லைகா நிறுவனம் வந்திருப்பதாகவும், இதுவரை மேற்கொண்டிருக்கும் தயாரிப்பு பணிகளை அப்படியே வேறு ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு கைமாற்றி விடவும் அந்நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ படம் குறித்து வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்திருக்கும் லைகா நிறுவனம், ”‘இந்தியன் 2’ படத்தை கைவிடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இது தொடர்பாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. தற்போது 60 சதவீதம் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். ஊரடங்கு முடிவுக்கு வந்து சினிமா படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி வழங்கியவுடன் எஞ்சியுள்ள படப்பிடிப்பை முடித்துவிடுவோம்.” என்று தெரிவித்துள்ளது.