டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் ‘மகாசேனா’!
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’. இயற்கை, ஆன்மீகம், காடுகளுக்கான பாரம்பரியம் மற்றும் மனித நெறிமுறைகள் இணைந்த ஒரு மாபெரும் காடு சார்ந்த ஆக்ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இதில் விமல் நாயகனாக நடித்திருக்கிறார். ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, மஹிமா குப்தா, ஜான் விஜய், கபீர் துஹான் சிங், அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, படத்தின் முக்கிய குறியீடுள்ள கதாபாத்திரத்தில் ஒரு யானை, சேனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறது.
ஏ.பிரவீன் குமார் மற்றும் உதய் பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசையை உதய் பிரகாஷ் அமைத்திருக்கிறார். டி.ஆர்.மனஸ் பாபு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நாகூரான் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்ய, வி.எஸ்.தினேஷ் குமார் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். தினேஷ் கலைசெல்வன் பாடல்கள் எழுத, தஸ்தா மற்றும் அமீர் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ராம் குமார் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார்.
கூடலூர், வயநாடு, கொல்லிமலை மற்றும் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் 90% உண்மையான காடுகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம், தெய்வீக இயற்கை சக்திகளுக்கும் அழிவை நோக்கும் மனித பேராசைக்கும் இடையிலான மோதலை ஆழமான காட்சிப்படுத்தலுடன் எடுத்துக் காட்டுகிறது. மாபெரும் திருவிழா கிளைமாக்ஸ், உணர்ச்சி நிறைந்த கதைக்களம் மற்றும் மேம்பட்ட CGI தொழில்நுட்பங்கள் ஆகியவை பார்வையாளர்களை தெய்வீகமும் சாகசமும் இணைந்த உலகிற்குள் நிச்சயம் இழுத்துச் செல்லும்.
இத்திரைப்படத்தின் சவுண்ட்டிராக் ஏ. பிரவீண் குமார் மற்றும் உதய் பிரகாஷ் (UPR) ஆகியோரால் உருவாக்கப்பட்ட நான்கு புதிய பாடல்களை கொண்டுள்ளது. பிரபலப் பாடகர்கள் வைக்கம் விஜயலட்சுமி, வி.எம். மகாலிங்கம், வி.வி. பிரசன்னா மற்றும் பிரியங்கா என்.கே. ஆகியோர்கள் பாடியுள்ள இப்பாடல்கள், பழங்குடி இசைத் தாளங்களையும் ஆன்மீக நாதங்களையும் இணைக்கின்றன.
வரும் டிசம்பர் 12 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘மகாசேனா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 30 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், படக்குழுவினர் பங்கேற்று படம் பற்றிய பல சிறப்பு தகவல்கலை பகிர்ந்து கொண்டார்கள். மேலும், நிகழ்ச்சியில் படத்தின் இசை ஆல்பம், முக்கியமான காட்சிகள் மற்றும் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் ஆகியவை வெளியிடப்பட்டன. இது அங்கு கலந்து கொண்ட அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

நிகழ்ச்சியில் படத்தின் இயக்குநர் தினேஷ் கலைசெல்வன் பேசுகையில், ”மகாசேனா என்பது நம்பிக்கை, சக்தி, மற்றும் இயற்கையின் சீரான சமநிலையைப் பற்றிய கதை. இந்தப் படத்தில் காடு ஒரு பின்னணி அல்ல — அது உயிரோடு இருக்கும் ஒரு கதாபாத்திரம். பேராசை தெய்வீக ஒற்றுமையை எவ்வாறு சீர்குலைக்கிறது, ஆன்மீகம் அதை எவ்வாறு சீரமைக்கிறது என்பதை இந்த பயணத்தின் மூலம் காட்ட விரும்பினேன்.” என்றார்.
இத்திரைப்படம் டிசம்பர் 12, 2025 அன்று PVR INOX Pictures மூலம் தமிழ் நாடு உள்ளிட்ட உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. அதன் அற்புதமான காட்சிப்பதிவு, ஆன்மீக ஆழம், மற்றும் உணர்ச்சி மிகுந்த கதை சொல்லல் மூலம் மகாசேனா, காடுகளுக்குள் இருக்கும் ஆன்மாவின் அடிப்பகுதிக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஒரு தனித்துவமான திரைவெளிப் பயணத்தை உறுதி செய்கிறது.

