Nov 21, 2022 06:39 PM

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படப்பிடிப்பு தொடங்கியது

மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ படப்பிடிப்பு தொடங்கியது

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். ’பரியேறும் பெருமாள்’, ’கர்ணன்’, வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’மாமன்னன்’ படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக ’வாழை’ படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார்.  

 

‘வாழை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து நவி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் தயாரிக்கிறார்கள். 

 

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

 

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.