Apr 30, 2024 05:16 AM

’மெளனகுரு’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரசாவதி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

’மெளனகுரு’ புகழ் சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரசாவதி’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!

’மெளனகுரு’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார், முதல் படத்திலேயே தமிழ் சினிமாவையும் தாண்டி கவனம் ஈர்த்தார். தமிழ் மட்டும் இன்றி கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ‘மெளனகுரு’ திரைப்படம் ரீமேக் செய்யப்பட்ட நிலையில், அவரது இரண்டாவது படமான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளை வென்றது. இதில் 24 விருதுகள் சிறந்த இயக்குநருக்கானதாக மட்டும் இன்றி, இப்படத்தின் பல வசனங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இயக்குநர் சாந்தகுமார் தற்போது ‘ரசாவதி’ என்ற திரைப்படத்தை இயக்கியிருப்பதோடு, தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான டி.என்.ஏ மெக்கானிக் கம்பெனி மூலம் தயாரிக்கவும் செய்திருக்கிறார். காதல் மற்றும் ஆக்‌ஷன் க்ரைம் திரில்லர் ஜானர் படமான இதில் அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க, தன்யா ரவிச்சந்திரன் நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பல பரிச்சயமான நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இந்த நிலையில், நடிகர்கள் கார்த்தி, துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ‘ரசாவதி; படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். டிரைலர் வெளியாகி சில மணி நேரங்களில் வைரலாகி டிரெண்டாகியுள்ளது. மேலும், இந்த டிரைலரில் படம் மே 10 ஆம் தேதி வெளியாக இருப்பதாகவும், படத்தை பிரபல வெற்றி விநியோகஸ்தர் பி.சக்திவேலன் தனது சக்தி பிலிம் பேக்டரி மூலம் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார், என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ரசாவதி படம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் கூறுகையிக்ல், “கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். ஒட்டு மொத்த படக்குழுவினரும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்து, மே 10 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய உதவிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி பி.சக்திவேலன் சாருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

 

எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சிவராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத, தபஸ் நாயக் ஒலிக்கலவையை மேற்கொண்டுள்ளார். ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க், சதீஷ் கிருஷ்ணன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

 

உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு எல பல்வேறு உணர்வுகளை கொண்ட படமான ‘ரசாவதி’ கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விசயம் என்பது குறிப்பிடத்தக்கது.