May 04, 2024 06:44 AM

”வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது” - நடிகை ஜோதிகா

”வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது” - நடிகை ஜோதிகா

குடும்பத்துடன் மும்பையில் செட்டிலாகிவிட்ட நடிகை ஜோதிகா, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில், மம்முட்டியுடன் இணைந்து அவர் நடித்த ‘காதல் - தி கோர்’ என்ற மலையாளத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், அஜய் தேவ்கானுடன் அவர் இணைந்து நடித்த ‘சைத்தான்’ இந்தி படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ‘ஸ்ரீகாந்த்’ மற்றும் ‘டப்பா கார்டெல்’ என இரண்டு இந்தி திரைப்படங்களில் ஜோதிகா நடித்திருக்கிறார்.

 

பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவு உருவாகியுள்ள ‘ஸ்ரீகாந்த்’ திரைப்படம் வரும் மே 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. துஷார் ஹிர நந்தானி இயக்கியிருக்கும் இப்படத்தில் ஸ்ரீகாந்த் வேடத்தில் பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்திருக்கிறார். அவரது ஆசிரியையாக ஜோதிகா நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆலயா எஃப், சரத் கெல்கர், ஜமீல் கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

 

டி சீரிஸ்  மற்றும் சாக் இன் சீஸ் பிலிம் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், கிருஷ்ணகுமார் மற்றும் நிதி பார்மர் ஹிராநந்தானி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு பிரதம் மேத்தா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஆனந்த் மிலிந்த், தனிஷ் பக்‌ஷி, சாஸெட் - பரம்பரா மற்றும் வேத் சர்மா ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

 

தற்போது இப்படத்தின் விளம்பர பணிகளில் தீவிரம் காட்டி வரும் நடிகை ஜோதிகா, நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்து கூறுகையில், “ஸ்ரீகாந்த் திரைப்படம் மிகவும் இன்ஸ்பிரேஷனான ஸ்டோரி.  துணிச்சலாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் நானும் பங்களிப்பு செய்ததற்காக பெருமிதம் கொள்கிறேன். என்னுடைய திரையுலகப் பயணத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது.  ஸ்ரீகாந்த் பொல்லாவின் கதை கேட்டதும் எனக்கு வியப்பு ஏற்பட்டது. அவரை நேரில் சந்தித்து பேசியதும், அவரது வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை கேட்ட பிறகு வாழ்க்கை பற்றிய எனது பார்வை முற்றாக மாறிவிட்டது. அதிலும் குறிப்பாக பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகள் குறித்த என்னுடைய பார்வை மாறிவிட்டது.  அவர்கள் எவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் என்பதையும் .. பொதுவெளியில் அவர்கள் அவர்களை எப்படி  நாம் நடத்துகிறோம் என்பதையும் குறித்தும் பல வினாக்களை என்னுள் எழுப்பியது.

 

இந்தத் திரைப்படம் பலருக்கும் அவர்களது அகக்கண்களை திறந்து விடும் படைப்பாக இருக்கும். இந்தப் படம் வெளியான பிறகு பார்வைத்திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளை பற்றி நாம் கொண்டிருக்கும்  பார்வையில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். இந்த திரைப்படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். ' காக்க காக்க", 'ராட்சசி' அதன் பிறகு 'ஸ்ரீகாந்த்' எனும்  இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக ஆசிரியையாக நடித்திருக்கிறேன்.

 

பாலிவுட் திரையுலகில் நான் நடிக்கும் மூன்றாவது இந்தி திரைப்படம் இது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் இனிமையானது. அற்புதமானது.  பணியாற்றுவதற்கு மொழிகள் தடையில்லை. மலையாள திரையுலகமாக இருந்தாலும்..  தமிழ் திரையுலகமாக இருந்தாலும்.. பாலிவுட் திரையுலகமாக இருந்தாலும்..  திறமையான கலைஞர்களுடன் தான் பணியாற்றியிருக்கிறேன். இந்த திரைப்படத்தை டி சிரீஸ் நிறுவனமும் , நிதி ஹிராநந்தனியும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். துஷார் ஹிராநந்தனி இயக்கியிருக்கிறார். மே பத்தாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

 

Jyothika and Srikanth Movie Director

 

படத்தின் இயக்குநர் துஷார் ஹிர நந்தானி பேசுகையில், “ஸ்ரீகாந்த் பொல்லாவின் சுயசரிதையை திரைப்படமாக உருவாக்குவதற்காக ஹைதராபாத்தில் அவரை சந்தித்தேன். மூன்று நாட்கள் அவருடன் செலவழித்தேன். நிறைய விசயங்கள் குறித்து விவாதித்தோம்.  அதன் போது அவர் திரைப்படத்தை உருவாக்குவதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.” என்றார்.