கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது. இதில் இசை, நடனம், நாடகம் என இவ்விருநாளும் கலையின் மகத்துவத்தை வெளிக்கொண்ர்ந்தது.

2023ஆம் ஆண்டில் தொடங்கிய இந்த விழா, சென்னையின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கலை நிகழ்வுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது. பாரம்பரிய இந்தியக் கலை வடிவங்களின் மேன்மையையும், புதிய தலைமுறை கலைஞர்களின் படைப்பாற்றலையும் இணைக்கும் சிறந்த தளமாக இது விளங்குகிறது. சென்னையின் தென்னிந்திய கலாச்சாரத் தலைநகரம் என்ற மரியாதைக்கு இந்த ஆண்டு நடைபெற்ற விழாவும் சாட்சியாக இருந்தது.

விழாவின் முதல் நாளில், பாரதநாட்டிய கலைஞர் ருக்மிணி விஜய்குமார் அவர்களின் அற்புதமான நடனத்துடன் துவங்கி, பின்னர் சுபா ஸ்ரீ தனிகாச்சலம் தலைமையிலான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரபல பின்னணி பாடகர்கள் ஹரிச்சரண் சேஷாத்ரி, சாய் விக்னேஷ், திஷா பிரகாஷ், சந்தோஷ் சுப்பிரமணியன், வித்யா கல்யாணராமன் ஆகியோர் கலந்துகொண்டு இசை விருந்தினை வழங்கினர்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடிகை ரோஹிணி மற்றும் ப்ரலயன் இணைந்து அரங்கேற்றிய நாடகம் பார்வையாளர்களை கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து வீணை வித்தகர் ராஜேஷ் வைத்யா அவர்களின் மயக்கும் இசை நிகழ்ச்சியும், ராஹுல் வெல்லால் மற்றும் ஸ்பூர்த்தி ராவ் ஆகியோரின் இணைப்பு இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இசை, லயம், உணர்ச்சி ஆகியவற்றின் சங்கமமாக இவ்விழா பிரமிப்பூட்டியது.

இந்நிகழ்வில் கலை, சினிமா, கலாச்சாரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கிய பலரும் பாராட்டுப்பெற்றனர். காத்தாடி ராமமூர்த்தி, குரு ஏ. கன்னியாகுமாரி, அனிதா குப்புசாமி, புஷ்பவனம் குப்புசாமி, வில்லுப்பாட்டு பாரதி, சச்சு, ஏ.பி. ஸ்ரீதர், வேலு ஆசான், பி.கே. சம்பந்தன், ஆர். பாண்டியராஜன், இயக்குனர் வசந்த், தலைவாசல் விஜய், உண்ணிகிருஷ்ணன், வை.ஜீ. மகேந்திரன், நித்யாஶ்ரீ மஹாதேவன், நர்த்தகி, நள்ளி குப்புசாமி, எம். எஸ். பாஸ்கர், நெல்லை டி. கண்ணன், பாரதி ஸ்ரீதர், மாலதி, சௌம்யா, சஞ்சய் சங்கர், டாக்டர் சங்கீதா உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

திருமதி அஷ்வினி சாம் பால் விஷ்வநாதனால் ஒருங்கிணைக்கப்பட்ட இவ்விழாவில், பால்சன்ஸ் பியூட்டி & ஃபேஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சாம் பால், மற்றும் மேலாண்மை இயக்குநர், IAS மற்றும் IPS அதிகாரிகள், நடிகர் நாசர், இயக்குனர் வசந்த், பாடகர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

