ரஜினி, விஜய் இடையே ஏற்பட்ட திடீர் போட்டி! - காரணம் இந்த இயக்குநராம்
கடந்த பொங்கல் பண்டிகையின் போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும், ரஜினியின் ‘பேட்ட’ படமும் ஒன்றாக ரிலீஸ் ஆனது. அப்போது இருவரது ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக் கொண்டார்கள். இந்த மோதல் ரசிகர்களின் மோதலாக பார்க்கப்படாமல், ரஜினி மற்றும் அஜித் இடையே ஏற்பட்ட மோதலாகவே பார்க்கப்பட்டது.
இரண்டு படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும், வசூலில் அஜித்தின் ‘விஸ்வாசம்’ தான் முதலிடம் பிடித்ததாக ஒரு தரப்பும், ரஜினியின் ‘பேட்ட’ வெளிநாடுகளில் வசூலில் முதலிடம் பிடித்ததாக மற்றொரு தரப்பும் கூறி வந்தது. ஒருவழியாக இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், தற்போது அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூல் குறித்து வெளியான தகவல்கள் உண்மையா?, என்ற ரீதியில் அவ்வபோது சர்ச்சையான கருத்துகள் வெளியாகின்றன.
அஜித், ரஜினி மோதலை தொடர்ந்து தற்போது விஜய், ரஜினி இடையே திடீர் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் என்றும் கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடித்திருக்கும் ரஜினிகாந்த், தனது டப்பிங்கையும் முடித்து விட்டார். இதையடுத்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. ரஜினியும் தனது அடுத்தப் படம் குறித்து அறிவித்துவிட்டார். அவரது 168 வது படமான இப்படத்தை சிவா இயக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த நிலையில், தனது 168 வது படத்திற்குப் பிறகு 169 வது படத்தின் மூலம் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பணியாற்ற ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளாராம். சமீபத்தில் ஏ.ஆர்.முருகதாஸை சந்தித்த ரஜினி, அப்போது தனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதே சமயம், விஜயும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருக்கிறாராம்.
தற்போது, ‘தளபதி 64’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கைதி’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வரும் நிலையில், தனது 65 வது படத்தின் மூலம் மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விஜய் விரும்புகிறாராம். இது குறித்து விஜய் தரப்பு முருகதாஸிடமும் பேசிவிட்டார்களாம்.
ரஜினியின் 168 அது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் முடிந்து விடுமாம். அதேபோல், விஜயின் 64 வது படமும் ஏப்ரலில் முடிந்துவிடுமாம். எனவே, ரஜினியும், விஜயும் தங்களது அடுத்தப் படம் முருகதாஸ் இயக்க வேண்டும் என்று விரும்புவதால், அநேகமாக இருவரும் ஒரே நேரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டி இருக்குமாம். இப்படி இரண்டு முன்னணி நடிகர்களும் ஒரே நேரத்தில் தேதி கொடுப்பதால், யாருக்கு ஓகே சொல்வது என்று முருகதாஸ் குழப்பத்தில் இருக்கிறாராம்.
அதே சமயம், ரஜினியும் சரி விஜயும் சரி, தங்களது தற்போதைய படங்கள் முடிந்ததும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க தீவிரம் காட்டுவதால், இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.