ரம்யா கிருஷ்ணனை வைத்து ஹாரர் படம் இயக்கும் பிரபல மலையாள இயக்குநர்!

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் வினயன், கடந்த 30 வருடங்களில் பல ஹிட் படங்களை கொடுத்திருப்பதோடு, ’என் மன வானில்’, ‘காசி’, ‘அற்புத தீவு’ ஆகிய தமிழ்ப் படங்களையும் இயக்கியிருக்கிறார்.
தற்போது, சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகும் வினயன், ரம்யா கிருஷ்ணனை வைத்து ஹாரர் படம் ஒன்றை இயக்குகிறார்.
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதோடு, அப்படத்தில் கலாபவன் மணியாக நடித்த அறிமுக நடிகர் ராஜாமணி, தற்போது மலையாள சினிமாவி முன்னணி நடிகராகியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு வினயன் இயக்கி சூப்பர் ஹிட்டான ஹாரர் படம் ‘ஆகாசகங்கா’. இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது எடுக்க இருக்கிறார். மலையாள சினிமாவின் டிரெண்ட் செட்டிங் படமாக அமைந்த ‘ஆகாசகங்கா’ திகில் காட்சிகள் நிறைந்த அதே சமயம் நகைச்சுவை நிறைந்த படமாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ரசிகர்களை கவரக்கூடிய படமாகவும் உருவாகிறது.
இப்படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி உள்ளிட்ட பலர் நடிக்க, இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
பகத் பாசில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பிஜிபால் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பாலக்காடு, கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வரும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.