Mar 15, 2024 06:37 PM

’ரோமியோ’ படம் விஜய் ஆண்டனி சாருக்கு பெண் ரசிகர்களை அதிகமாக்கும் - இயக்குநர் நம்பிக்கை

’ரோமியோ’ படம் விஜய் ஆண்டனி சாருக்கு பெண் ரசிகர்களை அதிகமாக்கும் - இயக்குநர் நம்பிக்கை

அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரோமியோ’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, தலைவாசல் விஜய், விடிவி கணேஷ், இளவரசு, சுதா, ஸ்ரீஜா ரவி  உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படம் ரம்ஜான் பண்டிகையன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

 

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினராக தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துக்கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் ஆண்டனி, “இந்த மேடையே சந்தோஷமாக உள்ளது. விநாயக் போன்ற திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. மிருணாளினி தன்மையான நல்ல பொண்ணு. படத்தை புரோமோட் பண்ண எங்களை பத்தி கிசுகிசு கிரியேட் பண்ணலாமா என யோசித்தோம். ஆனால், எதுவுமே வொர்க்கவுட் ஆகவில்லை. முதன் முறையாக ஒரு காதல் படத்தில் நடித்துள்ளேன். ஒரு பெண் எப்படி ஆணை கொடுமைப்படுத்துகிறாள், ஆண் சமூகம் எப்படி இதை பொறுத்துக் கொள்கிறது என்பதுதான்  கதை. குடும்பத்தோடு நிச்சயம் படத்தைப் பார்க்கலாம்.” என்றார்.

 

படத்தின் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் பேசுகையில், “ஒரு கணவனாக காதலனாக ஒரு ஆணை பெண் எப்படி பார்க்க வேண்டும் என்பதுதான் கதை. அதற்கான இன்ஸ்பிரேஷன் என் அம்மாதான். அவருக்கு நன்றி. வாய்ப்புகளுக்காக காத்திருந்த போதுதான் விஜய் ஆண்டனி சாரிடம் இருந்து கால் வந்தது. என்னுடைய படம் பார்த்துவிட்டு அவர் அவ்வளவு டீடெய்லாகப் பேசினார். கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார். லவ் ஸ்டோரி என முடிவு செய்ததும் எல்லாரும் நோ சொன்னார்கள். அப்போதே இதைத்தான் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. இது வழக்கமான காதல் கதை கிடையாது. சக்சஸ்ஃபுல்லான மனிதன் தன் வாழ்வில் மிஸ் செய்யும் காதல்தான் 'ரோமியோ'. பல சர்ப்ரைஸான விஷயங்கள் கதையில் இருக்கிறது. தன் வாழ்வில் வரும் பெண்ணை எப்படி அணுக வேண்டும் என இதில் சொல்லி இருக்கிறோம். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஹீரோயின் லீலாவுக்காக ஒரு வருஷம் தேடினோம். மிருணாளினி ஃபோட்டோ பார்த்துவிட்டு அவரிடம் பேசினோம். அவருக்கும் கதை பிடித்து விட்டது. விஜய் ஆண்டனி சார் எனக்கு 'பிச்சைக்காரன்' படத்தில் இயக்கம் கற்றுக் கொடுத்தார். அவரை தனிப்பட்ட முறையில் அந்த சமயத்தில் தெரிந்து கொண்டேன். அவருடைய நிஜ முகத்தை ஜாலியாக இதில் நீங்கள் பார்க்கலாம். வாழ்க்கையில் உள்ள எல்லா எமோஷன்களும் படத்தில் இருக்கும். இந்த படத்திற்குப் பிறகு விஜய் ஆண்டனி சாருக்கு பெண் ரசிகர்கள் அதிகமாகி விடுவார்கள். அறிவு- லீலாவை உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை மிருணாளினி ரவி பேசுகையில், “ரோமியோ' படம் என் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும். பட வாய்ப்பு என்பதை விட இதை பொறுப்பாகவே பார்க்கிறேன். மிருணாளினி என இயக்குநர் என்னைக் கூப்பிட்டதே இல்லை. லீலா என்றுதன கூப்பிடுவார். அந்த அளவுக்கு கதையோடு ஒன்றிவிட்டார். விஜய் ஆண்டனி சார் மல்டி டாஸ்கிங் நபர். பல விஷயங்கள் அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். இந்தப் படத்தில் நான் முதல்முறையாக டப்பிங் செய்திருக்கிறேன். பர்சனலாக நான் என்னுடன் இந்தக் கதையை ரிலேட் செய்து கொண்டேன். தலைவாசல் விஜய் சார் எனக்கு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடித்துள்ளார்.  படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ரம்ஜானுக்கு படம் பாருங்கள்.” என்றார்.

 

நடிகர் தலைவாசல் விஜய் பேசுகையில், “பிளாக்பஸ்டர் படத்தில் நானும் ஒரு பங்கு என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படம் விஜய் ஆண்டனிக்கு நிச்சயம் பெரிய மாற்றம் கொடுக்கும். அந்த அளவுக்கு நல்லவர். பெரிய துன்பத்தை தனது மனவலிமையால் கடந்து வந்து தன் வேலையை செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த மனநிலையை நான் மதிக்கிறேன். படத்தில் என் கதாபாத்திரம் இன்றைய தலைமுறைக்கு பிடிக்குமா எனத் தெரியவில்லை. இயக்குநர் விநாயக் தனக்கு வேண்டியது கிடைக்கும் வரை என்னை விடவே இல்லை. அந்த அளவுக்கு திறமையானவர். வெத்தல பாடல் சூப்பர் ஹிட். படத்தில் நடித்திருப்பது மகிழ்ச்சி.” என்றார்.

 

இசையமைப்பாளர் பரத் தனசேகர் பேசுகையில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு டிரம்மராக என் இசைப்பயணத்தை ஆரம்பித்தேன். சின்ன வயதில் இருந்தே கீபோர்ட், தபலா, பியானோ என ஒவ்வொரு கிளாஸ் தினமும் போவேன். விளையாடுவதற்குக் கூட நேரமே கிடைக்காது எனத் தோன்றும். ஆனால், அந்த இசைதான் என்னை இந்த மேடையில் நிற்க வைத்திருக்கிறது. என் அம்மா, அப்பா, தங்கச்சி, நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி. அவர்களை போலவே பெஸ்ட்டாக 'ரோமியோ' படம் அமைந்தது. இந்தப் படத்தில் செல்லக்கிளி பாடல்தான் முதலில் கம்போஸ் செய்தோம். பாடல் கேட்டுவிட்டு விஜய் ஆண்டனி சார் பிடித்திருந்தது என்று சொன்னார். படத்தில் எட்டு பாடல்கள் உள்ளது. நிறைய ஜானர் இதில் இருக்கும். பல கலைஞர்களுடன் பாடலுக்காக இணைந்து பணியாற்றியுள்ளோம். என் இசையில் விஜய் ஆண்டனி சார் ஒரு பாடல் பாடி இருக்கிறார். சீக்கிரம் அந்தப் பாடல் ரிலீஸ் ஆகும். விநாயக் என்ன வேலை பார்த்தாலும் திருப்தி ஆகவே மாட்டார். இந்தப் படம் சூப்பராக வந்துள்ளது. விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி எல்லோருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். படத்தில் வேலை பார்த்த எல்லோருக்குமே நன்றி. இசை பொருத்தவரை எனக்கு பெரிய கற்றலாக இந்தப் படம் இருந்தது. ரம்ஜானுக்கு வரும் இந்தப் படத்தை தியேட்டரில் வந்து பாருங்கள்.” என்றார். 

 

இணை இயக்குநர் வைத்தியநாதன் பேசுகையில், ”இயக்குநர்கள் ஜி.எம். குமார், ராஜ்கபூர் எனப் பலரிடம் இணை இயக்குநராக 30 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்த்து வருகிறேன். இத்தனை வருடங்கள் எனக்கு இயக்குவதற்கு கிடைக்காத வாய்ப்பு என் மகன் விநாயக்குக்கு விஜய் ஆண்டனி சார் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமாவில் கதையைத் தேடும் ஹீரோவாக விஜய் ஆண்டனி இருக்கிறார். என் மகனின் கதையை படித்துவிட்டு, 'கதை பம்பர் ஹிட். என் வாழ்க்கையில் இன்னொரு 'பிச்சைக்காரன்'' என மெசேஜ் செய்திருந்தார். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. படம் நல்ல எண்டர்டெயின்மெண்ட்டாக வந்துள்ளது. நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும்.” என்றார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட  தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ”வெத்தல சாங் நேற்றுதான் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்தப் பாட்டில் இருந்தது போல கலாட்டாவான விஜய் ஆண்டனியை நான் படத்தில் பார்த்ததே இல்லை. அவரை இப்படி ஜாலியாக பார்க்க வேண்டும் என நிறைய பேர் விரும்பியிருக்கிறார்கள். அது நிறைவேறி விட்டது. எத்தனை இடர்பாடுகள் வாழ்க்கையில் வந்தாலும் அதை தாண்டி வருவது எப்படி என்பதை விஜய் ஆண்டனியிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். மிகவும் அர்ப்பணிப்பான நபர். வாழ்வில் பெரிய துன்பம் வந்தபோது, இரண்டாவது நாளே ஷூட்டிங் போனார். எனக்கு மட்டுமல்ல, நம்மில் நிறைய பேருக்கு அவர் இன்ஸ்பிரேஷன். படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு படக்குழு வந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்.” என்றார்.

 

முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, நடனம், ஆக்‌ஷன் ஆகியவற்றுடன் காதலிலும் புதிய பரிணாமத்தோடு நடித்திருப்பது ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ”செல்லக்கிளியே...” பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள ‘வெத்தல..” பாடலும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.