Sep 25, 2020 10:55 AM

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணம்!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மரணம்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது.

 

இதற்கிடையே, தொடர் சிகிச்சை மூலம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவனை தெரிவித்தது. மேலும், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகனும், அவ்வபோது எஸ்.பி.பி-யின் உடல் நிலை குறித்து தகவல்களை வெளியிட்டு வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த 51 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இன்று பிற்பகல் 1.04 மணிக்கு உயிரிழந்தார். எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் பலர் பிரார்த்தனை செய்து வந்த நிலையில், அவரது மரணம் அனைவரையும் சோகமடைய செய்துள்ளது.

 

பாடகராக மட்டும் இன்றி நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் திரையுலகில் வலம் வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில், சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.