Apr 23, 2019 10:13 AM

சிவகார்த்திகேயனின் வாக்குப் பதிவில் குளறுபடி! - நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம்

சிவகார்த்திகேயனின் வாக்குப் பதிவில் குளறுபடி! - நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம்

கடந்த 18 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப் பதிவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது வாக்கை பதிவு செய்தததோடு, வாக்களிப்பதின் அவசியம் குறித்தும் மக்களிடம் எடுத்துரைத்தனர்.

 

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா நடிகைகள் சினேகா, மீனா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் வாக்குப் பதிவு செய்தனர். மேலும், ஷங்கர், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர்கள் வாக்களர்கள் பட்டியலில் இல்லாததால் அவர்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப்படவில்லை.

 

இதற்கிடையே, நடிகர் சிவகார்த்திகேயனின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாததால், அவரை தேர்தல் அதிகாரிகள் ஓட்டுப் போட அனுமதிக்கவில்லை. பிறகு மீண்டும் பட்டியலை சரி பார்த்து அவரது பெயர் இருப்பதாக கூறி அவரை ஓட்டு போட வைத்தனர். ஆனால், சிவகார்த்திகேயனின் பெயர் வாக்களர் பட்டியல் இல்லை என்றும், பெயர் இல்லாமலே அவரை ஓட்டு போட தேர்தல் அதிகாரிகள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.

 

இது குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்குப் போட்டிருப்பது உண்மை தான் என்று கூறியவர், அவரை ஓட்டு போட அனுமதித்த தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் தெரிவித்திருக்கிறார்.