May 04, 2020 02:40 PM

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் கோரிக்கை

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசு மேற்கொண்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையால் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டிருப்பது போல சினிமா துறையும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், அத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் மட்டும் இன்றி முதலாளிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

 

இதற்கிடையே, ஊரடங்கு வரும் மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், சில கடைகளை திறக்கவும், சில தொழில் நிறுவனங்களை இயக்கவும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு வழங்கியுள்ளது.

 

இதேபோல், திரைப்பட துறைக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடைகளையும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்த வேண்டும் என்று பெப்ஸி அமைப்பு கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர், திரைப்பட படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கவில்லை என்றாலும், திரைப்பட பின்னணி வேலைகளான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இது குறித்த கோரிக்கை மனுவை தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், மனோபாலா, டி.சிவா, திருமலை ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் இன்று நேரில் வழங்கினார்கள்.

 

அந்த மனுவில், அதிகபட்சமாக 4 பேர் முதல் 5 பேர் வரை பணியாற்றும் படத்தொகுப்பு, அதிகபட்சமாக 4 பேர் முதல் 5 பேர் பணியாற்றும் ஒலிச்சேர்க்கை, 10 முதல் 15 பேர் பணியாற்றும் கம்ப்யூட்டர் மற்றும் விஷுவல் கிராபிக்ஸ், அதிகபட்சம் 4 பேர் முதல் 5 பேர் பணியாற்றும் வண்ண கிரேடிங், அதிக பட்சமாக 5 பேர் பணியாற்றும் பின்னணி இசை சேர்ப்பு, 4 பேர் முதல் 5 பேர் வரை பணியாற்றும் ஒலிக்கலவை, ஆகிய திரைப்பட பின்னணி வேலைகளுக்கும், அந்த வேலைகளிலும் ஈடுபடும் அலுவலகங்கள் இயங்கவும் அரசு அனுமதி அளிக்க வேண்டும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுபோன்ற திரைப்பட பின்னணி பணிகளுக்கு கேரள அரசு நேற்று முதல் அனுமதி வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.