’மொய் விருந்து’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
எஸ்.கே பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் எஸ்.கமலகண்ணன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சி.ஆர்.மணிகண்டன் இயக்கத்தில், உணர்வுப்பூர்வமான குடும்ப கதையாக உருவாகும் ‘மொய் விருந்து’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது.
தமிழகத்தின் சில கிராமங்களில் இன்றும் நடைமுறையில் இருக்கும் பாரம்பரியமான மொய் விருந்து எனும் பழக்கம் தான் இந்தப்படத்தின் மையம். மஞ்சப்பை, கடம்பன், மைடியர் பூதம் படங்களில் பணியாற்றிய சி.ஆர்.மணிகண்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் சி.ஆர்.மணிகண்டன் கூறுகையில், “நான் பேராவூரணி எனும் ஊருக்கு சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு குடும்பம் மூன்று வருடத்திற்கு ஒரு முறை தான் மொய் விருந்து நடத்த முடியும். ஏனென்றால், அந்த 3 வருடத்தில் அவர்கள் வாங்கிய மொய்ப்பணத்தை திருப்பி செய்ய வேண்டும். அப்படி சரியாக செய்பவர்களுக்கே அதிக மொய் வரும். இந்த பழக்கம் மூலம் ஊரே ஒழுக்கமாக இருக்கும் அனைவருக்கும் உதவி கிடைக்கும். இது எனக்கு பெரிய ஆச்சரியம் தந்தது, இதை மையமாக வைத்து உருவாக்கியது தான் இந்தப்படம், அதனால் தான் இந்தப்படத்திற்கு 'மொய் விருந்து' என்று தலைப்பு வைத்துள்ளோம், இது அனைவருக்கும் பிடிக்கும்படியான எளிமையான அழகான ஃபேமிலி டிராமா.” என்றார்.
பாலுமகேந்திராவின் ’வீடு’ படப்புகழ் 'ஊர்வசி' அர்ச்சனா இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் டிவி புகழ் ரக்ஷன் மற்றும் ஆயிஷா நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் அபர்ணதி, தீபா சங்கர், சுஜாதா, மானஸ்வி கொட்டாச்சி, அருள்தாஸ், நாமோ நாராயணன், கஜராஜ், தங்கதுரை, லொள்ளு சபா மாறன், கிச்சா ரவி, முருகானந்தம் மற்றும் கொட்டச்சி உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் முழு படப்பிடிப்பும் கொடைக்கானலின் பண்ணைக்காடு பகுதியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்திருக்கிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட போஸ்ட் புரொடக்சன் பணிகள், பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

