Mar 11, 2024 06:51 AM

வைரலாகும் ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ பட டிரைலர்!

வைரலாகும் ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ பட டிரைலர்!

மலையாள சினிமாவின் முன்னனி நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் நடிப்பில், ப்ளெஸ்ஸி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிரபார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் ரசிகரகளின் ஆவலை அதிகப்படுத்தியிருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

பிரமிப்பைத் தூண்டும் இந்தக் கதை, நஜீப்பின் நிஜ வாழ்க்கையைத் தேடும் இன்னல்கள் நிறைந்த அவரது பயணத்தைச் சுற்றி வருகிறது. பிருத்விராஜ் சுகுமாரனின் பிரமிக்க வைக்கும் மாற்றம், பல்வேறு தோற்றங்கள், பரந்த பாலைவனத்தின் அற்புதமான காட்சிகளுடன், இந்தப் படத்தின் டிரைலர் கொடிய உலகத்தை காட்டி நம்மை அச்சுறுத்துகிறது.

 

டிரைலர் மற்றும் படம் பற்றி இயக்குநர் ப்ளெஸ்ஸி கூறுகையில், “என்னைப் பொருத்தவரை இந்தப் படம் மிகப் பெரிய உயிர்வாழும் சாகசமாக நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன். ஏனென்றால் நம்பமுடியாத ஒன்று உண்மையில் ஒருவருக்கு நடந்தது. புனைகதையை விட உண்மை எப்போதும் விசித்திரமாக இருக்கும். உண்மையில், நாவலின் டேக்லைனான 'நாம் வாழாத வாழ்க்கை அனைத்தும் நமக்கு கட்டுக்கதைகள்' என்பதுதான் படத்தின் ஆன்மாவும். படத்திற்காக கிட்டத்தட்ட பத்து வருடம் ஆகிவிட்டது. ஆனால், ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தியை உருவாக்க செலவிட்டதில் பாதி நேரத்தை  நான் செலவிட்டேன். அது பெரிய விஷயமல்ல. பார்வையாளர்களுக்கு படம் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

 

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் கூறுகையில், “இது ஒரு நீண்ட பயணம் மற்றும் எளிதான ஒன்றல்ல. பத்துவருட கால காத்திருப்புக்குப் பிறகு, எங்கள் கடின உழைப்பின் பலனை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள். கோவிட் நாட்களில் இருந்து இன்று வரை, இந்தப் படம் ஒரு எதிர்பாராத மற்றும் மறக்க முடியாத பயணமாக உள்ளது. ப்ளெஸ்ஸி சார் அவர்களின் பார்வையில் ஒரு பகுதியாக இருப்பதும், ஏ.ஆர். ரஹ்மான் போன்ற ஒரு மேஸ்ட்ரோ, இசையை உயிர்ப்பிப்பதைப் பார்ப்பதும் எனக்கு ஒரு மரியாதை. 'தி கோட் லைஃப்- ஆடு ஜீவிதம்' நமக்கு ஒரு திரைப்படம் என்பதை விட, இது நம் இதயங்களைத் தொட்ட ஒரு கதை. இது எப்போதும் நம்முடன் இருக்கும். பார்வையாளர்களும் அவ்வாறே உணருவார்கள் என நம்புகிறோம்” என்றார்.

 

 

மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனைப் படைத்த நாவலான ‘ஆடுஜீவிதம்’ கதையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் உருவாகியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமின் எழுதிய இந்த நாவல் வெளிநாட்டு மொழிகள் உட்பட 12 வெவ்வேறு மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 

 

90-களின் முற்பகுதியில் கேரளாவின் பசுமையான கடற்கரையிலிருந்து வெளிநாட்டில் அதிர்ஷ்டத்தைத் தேடி இடம்பெயர்ந்த  இளைஞன் நஜீப்பின் கடினமான பலைவான வாழ்க்கையை காட்சி மொழியின் மூலம் ரசிகர்களிடம் கடத்த வரும் ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ வரும் மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.