Apr 07, 2024 03:14 PM

’ஹாட் ஸ்பாட்’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு! - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

’ஹாட் ஸ்பாட்’ படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பு! - இயக்குநருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியான ‘ஹாட் ஸ்பாட்’ திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமான இதன் டிரைலர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், திரைப்படம் வெளியாகி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, “மக்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்” என்ற பாராட்டையும் பெற்றது.

 

இந்த நிலையில், படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ‘ஹாட் ஸ்பாட்’ குழுவினர் நேற்று சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சியில், பேசிய தயாரிப்பாளர்களில் ஒருவரான் சுரேஷ் குமார், நிகழ்ச்சி மேடையில் வைத்தே அடுத்த படத்திற்காக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு ரூ.10 லட்சம் முன்பணம் கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், இந்த கூட்டணியின் அடுத்த படம் ‘ஹாட் ஸ்பாட் 2’-வாக இருக்கும், என்று தெரிவித்தார்.

 

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “இந்தப்படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப்பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டேஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம்.” என்றார்.

 

நடிகை ஜனனி பேசுகையில், “ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி. கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன் ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப்படத்தை எடுத்தார். இந்தப்படத்தில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர். இந்தப்படத்தை நல்லமுறையில் எடுத்துச் சென்ற தயாரிப்பாளர்களுக்கு நன்றி.” என்றார்.

 

KJB டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் பாலமணிமார்பண் பேசுகையில், “பிரஸ் மீட்டில் நிறையக் கேள்விகள் பயத்தைத் தந்தது ஆனால் பிரஸ் ஷோவிற்கு பிறகு நிறைய பாராட்டுக்களும் வந்தது. இன்றைய அளவில் மக்கள் இந்தப்படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி. விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போதே படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் புரடியூசர் ஃப்ரண்ட்லி. தயாரிப்பாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வார். இடையில் விக்னேஷுக்கு அடியே படம் கிடைத்தது, அதனால் தான் இந்தப்படம் லேட் ஆனது. விக்னேஷை சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ஷோ ஃபுல்லாக போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான்,  உங்கள் எல்லோருக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகர் திண்டுக்கல் சரவணன் பேசுகையில், “பிரஸ் பீபிள் படம் பார்த்து என்னை போன் செய்து பாராட்டினார்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. "டோண்ட் ஜட்ஜ் த புக் பை இட்ஸ் கவர்" என்பது விக்கிக்கு தான் பொருந்தும், அவர் மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட். தன் பாதையை மாற்றி இயக்குநராக ஆகி, நல்ல படம் தந்துள்ளார். என்னை எப்படி இந்தப்படத்திற்கு செலக்ட் செய்தார் என்று தெரியவில்லை. அடுத்த படம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வாய்ப்பு தாருங்கள்.  நாங்கள் எல்லாம் சினிமாவை நம்பி தான் இருக்கிறோம், எங்களையெல்லாம் ஞாபகம் வைத்து, கூப்பிட்டு நடிக்க வைக்கும் விக்கிக்கு நன்றி. பாராட்டிய பத்திரிக்கை நண்பர்களுக்கு நன்றி.” என்றார்.

 

நடிகர் அமர் பேசுகையில், “2020 ல் இந்தப்படம் செய்தேன் அதுக்கப்புறம் இந்தப்படம் செய்ததையே மறந்துவிட்டேன். ரிலீஸ் போஸ்டர் பார்த்து தான் இதில் நடித்திருக்கிறோம் எனச் சந்தோசப்பட்டேன். ஏ சர்டிபிகேட் என்பதால் குடும்பத்தோடு போகாமல் தனியாகப் போனேன், ஆனால் பலர் குடும்பத்தோடு படத்தை ரசிக்க வந்தார்கள். ரொம்ப சந்தோசமாக இருந்தது. அடுத்த படத்திலும் வாய்ப்பு தாருங்கள்.” என்றார்.

 

இசையமைப்பாளர் வான் பேசுகையில், “விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என் டீம் எல்லோரும் நன்றாக வேலை செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன் பேசுகையில், “இது தேங்ஸ் மீட், மக்களிடம் இந்தப்படம் பேசப்படக் காரணமே பத்திரிக்கையாளர்கள் தான். நன்றி. எங்கள் படம் 11 படங்களுடன் வெளியானது. அது மிகப்பெரிய பிரஷரைத் தந்தது, ஆனால் மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள், இது போன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தந்தால், எங்களை மாதிரி நிறையப் பேர் படம் எடுப்பார்கள். இந்தப்படத்தின் நடிகர்களுக்கு நிறையத் தைரியம் இருக்க வேண்டும். இப்படி கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. விக்னேஷ் எப்படி  நடிகர்களை ஒத்துக்கொள்ள வைத்தார் எனத் தெரியவில்லை, இப்படம் டிரெய்லர் வந்த போது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் படம் வந்த பிறகு அனைவரும் பாராட்டினார்கள். நீங்கள் இன்னும் கொஞ்சம் பாராட்டினால் இந்த வாரமும் இந்தப்படம் ஓடும் நன்றி.  எங்கள் படத்தை ஆதரித்துப் பாராட்டியதற்கு நன்றி.” என்றார். 

 

செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார் பேசுகையில், “இந்தப்படம் வெற்றிபெறக்காரணம் பிரஸ் மீடியா தான். பிரஸ் மீட்டில் கேட்ட கேள்விகள் பார்த்து மிகவும் நொந்துபோய் விட்டேன் ஆனால் படம் பார்த்த பிறகு நீங்கள் தந்த ஆதரவு மிக மகிழ்ச்சியாக இருந்தது. விக்னேஷ் என் தம்பி மாதிரி, ஷார்ட்ஃபிலிம் காலத்திலிருந்து தெரியும். தினேஷ் மற்றும் பாலாவிற்கு நன்றி. ஒரு படத்தின் நெகட்டிவ் மட்டுமே காட்டி டிரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சி. என்னிடம் நாலு கதை சொன்னார் விக்னேஷ், அதில் ஏன் இரண்டு கதை எடுக்கவில்லை, படத்தின் பேர் மாற்றினார் அதையும் என்னிடம் கேட்கவில்லை, இப்போது அவரிடம் கேட்காமல் ஒன்று சொல்கிறேன்” எனக் கூறிய தயாரிப்பாளர், விக்னேஷ் கார்த்திக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக்கைத் தந்து அசத்தினார்.

 

Hot Spot Success Meet

 

நடிகர் சுபாஷ் பேசுகையில், “பிரஸ் ஷோவில் நீங்கள் தந்த ஆதரவு தான் இந்த வெற்றிக்குக் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த விக்னேஷுக்கு நன்றி. தயாரிப்பாளர்கள் பாலா சார், தினேஷ் சார்,  சுரேஷ் சார் மூவருக்கும் நன்றி. திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு,  இதில் நடித்த அனைவரும் சூப்பராக நடித்திருந்தனர்.  அமர், சரவணன் இருவரும் கலக்கியிருந்தார்கள். என் நடிப்பை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.” என்றார். 

 

நடிகை சோபியா பேசுகையில், “டிரெய்லர் லாஞ்சில் நடந்த நெகட்டிவ் கமெண்டால் நிறையப் பயந்தேன் ஆனால் இயக்குநர், டீம் எப்படி இருப்பார்கள் என்று நினைத்து, என்னைத் தேற்றிக்கொண்டேன். எங்கள் டீம் எந்த இடத்திலும் படத்தை விட்டுக்கொடுக்கவில்லை, படத்திற்கு நீங்கள் தந்த ரிவ்யூ தான் படத்தை வெற்றிபெறச் செய்தது. என்னையும் குழுவையும் பாராட்டிய அனைவருக்கும் நன்றி, என் குழுவினர் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

எடிட்டர் முத்தையா பேசுகையில், “அப்பா அம்மா நண்பர்களுக்கு நன்றி. அடியே படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப்படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம் ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி.  தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சிக்கிறோம்.” என்றார்.