Dec 03, 2023 08:54 AM

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழின் புதிய படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது!

‘சேத்துமான்’ இயக்குநர் தமிழின் புதிய படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் தொடங்கியது!

பிரபலமான நாவல்கள் திரைப்படங்களாக உருப்பெற்று விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுவது தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நமது பிராந்தியத்தின் இன மற்றும் மானுடவியல் அம்சங்களை அங்கீகரிக்கும் அற்புதமான நாவல்களை திரைப்படங்களாக கொண்டு வருவதையும் சினிமாத்துறை செய்து வருகிறது. 

 

இத்தகைய தனித்துவமான முயற்சியில் ஆர்வம் கொண்டவர்களில் ஒருவரான எஸ்.வினோத் குமார், பிரபல நாவலாசிரியர் பெருமாள் முருகன் கதை, வசனத்தில் உருவாகும் படத்தை சினிமாக்கரான் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட 'சேத்துமான்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் தமிழ் இப்படத்தை இயக்குகிறார். 

 

இப்படத்தில் 'கனா' புகழ் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். 'ஜெய ஜெய ஜெய ஹே', 'ஹிருதயம்' போன்ற படங்களில் தனது இயல்பான மற்றும் அற்புதமான நடிப்பால் பான்-இந்திய ரசிகர்களை கவர்ந்த தர்ஷனா ராஜேந்திரன் கதாநாயகியாக நடிக்கிறார். 

 

இப்படம் குறித்து இயக்குநர் தமிழ் கூறுகையில், “நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களை ஊக்குவிக்கும் எஸ்.வினோத் குமார் போன்ற தயாரிப்பாளரைப் பெற்றிருப்பது உண்மையில் பெரிய பாக்கியம். அனைவருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை மீண்டும் உருவாக்கும்  வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படம்  உருவாக்குவதில் கிடைக்கும்  அற்புதமான அனுபவத்தை எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்றார்.

 

கதை, வசனம் பெருமாள் முருகன் எழுத, திரைக்கதை எழுதி தமிழ் இயக்குகிறார். தீபக் ஒளிப்பதிவு செய்ய, பிந்துமாலினி மற்றும் வேதாந்த் பரத்வாஜ் இசையமைக்கின்றனர். கண்ணன் படத்தொகுப்பு செய்ய, பில்லா ஜெகன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 1 ஆம் தேதி பெங்களூரில் தொடங்கியது.  இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.