May 06, 2024 09:36 AM

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘தலைமைச் செயலகம்’!

வசந்த பாலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘தலைமைச் செயலகம்’!

இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இணையத் தொடர் ‘தலைமைச் செயலகம்’. ராடான் மீடியா ஓர்க்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார் தயாரித்திருக்கும் இத்தொடரில் ஆதியா மேனன், பரத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

 

தமிழ்நாட்டு அரசியல் களத்தின் பின்னணியில் லட்சியம், துரோகம் மற்றும் போராட்டம் மிகுந்த ஒரு பெண்ணின் அதிகார வேட்கையின் கதையை சொல்லும் ‘தலைமைச் செயலம்’ 8 அத்தியாயங்களாக உருவாகியுள்ளது. வரும் மே 17 ஆம் தேதி ஜீ5 ஒடிடி தளத்தில் வெளியாகிறது.

 

தமிழக அரசியல் களத்தின் பின்னணியில் நடக்கும் கதையில், முதல்வர் அருணாசலம் 15 ஆண்டுகளுக்கு முந்தைய ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்கிறார், இந்த விசாரணையால் அவரைச் சுற்றியுள்ளவர்கள் முதல்வர் நாற்காலிக்கு  ஆசைப்படுவதோடு அதற்காகத்  தீவிரமாக இயங்க ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையில், ஜார்க்கண்டில் உள்ள ஒரு தொலைதூர சுரங்க கிராமத்தில், சிபிஐ அதிகாரி நவாஸ் கான் இரண்டு தசாப்தங்கள் பழமையான கொலை வழக்கை ஆராய்கிறார். பரபரப்பான சென்னையில், புறநகர்ப் பகுதியில் கிடைக்கும் துண்டிக்கப்பட்ட கை மற்றும் தலையினை குறித்து டிஜிபி மணிகண்டன் ஒரு பயங்கரமான கண்டுபிடிப்பு குறித்து விசாரணையைத் தொடங்குகிறார். இந்த கதை விரிய விரிய  வேறுபட்ட பல நிகழ்வுகளை ஒன்றிணைகின்றது, காலத்தால் மறைக்கப்பட்ட மறந்துபோன உண்மைகளின் மீது ஒளி பாய்ச்சுகிறது.

 

தொடரின் முதல் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தொடர் குறித்து இயக்குநர் வசந்த பாலன் கூறுகையில்,  “அரசியல் அரங்கில் உலக விதிகள் எதுவும் பொருந்தாது. மத்திய அரசு, மாநில அரசுகளின் குரல்களைக் கூர்ந்து கவனிக்கும் போது, மாநிலத்தின் அடிப்படைத் தேவைக்கான குரலாக அவை மாறிவிட்டன என்பதைப் புரிந்து கொள்ளும்போது  புதிய அரசியல் பிறக்கும். சுயாட்சி, மாநில தன்னிறைவு மற்றும் மக்கள் உரிமைகள் போன்றவற்றில், ஊழல், ஊழலின் ஆபத்துகள், ஜனநாயகப் போராட்டத்தின் சமரசங்கள் போன்றவற்றால் கறை படிந்த அரசாக, தன் மாநில மக்களின் நலனைக் காக்கும் அரசைப் பார்க்கும் முயற்சி தான் தலைமைச் செயலகம். ஒரு மாநில முதலமைச்சரின் பார்வையில் ஆயுதப் போராட்டங்களின் ஆபத்துக்களைப் பற்றிப் பேசுகிறது இந்தக்கதை.” என்றார்.

 

ராடான் மீடியா வொர்க்ஸின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் கூறுகையில், “’தலைமைச் செயலகம்’ சீரிஸை உலகம் முழுவதும் ZEE5 உடன் இணைந்து வெளியிடுவது மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த சீரிஸ் தமிழக அரசியலின் தீவிரமான பக்கத்தைப் பேசுவதுடன், தேசிய அளவிலான அடித்தட்டு தொழிலாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் பக்கங்களை நுணுக்கமாகப் பேசுகிறது. அரசியல் மரபுகளுக்குக் கட்டுப்படாத ஒரு பெண்ணின் எழுச்சியை எதிரொலிக்கும் கதை தான், 'தலைமைச் செயலகம்'. இந்த சீரிஸ் அரசியல் சித்தாந்தங்களை வடிவமைப்பதில் பெண்களின் முக்கிய பங்கைச் சித்தரிக்கிறது. கொற்றவை, துர்கா மற்றும் அபிராமி ஆகியோரின்  கதைகளை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதன் மூலம், ஒரு பெரும் உரையாடலைத் தூண்டுவதையும், அரசியல் பற்றிய புரிதலை உண்டாக்குவோம் என நம்புகிறேன்.” என்றார்.

 

கொற்றவை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை ஸ்ரேயா ரெட்டிகூடுகையில், “’தலைமை செயலகம்’ படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில்  நான்  மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், மேலும் Zee5 உடன் இணைந்து இந்த சுவாரஸ்யமான கதையைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'நாம் எதிரிக்கு எதிராகக் கத்தியுடன் நின்றால், அவர்கள் பல கத்திகளால் திருப்பி அடிப்பார்கள்' என்ற கொற்றவையின் மேற்கோள் அவரது கதாபாத்திரத்தின் தன்மையைச் சொல்லி விடும்.  அமைதியான குணம், தன்னம்பிக்கை மற்றும் உள்ளுணர்வுகள் மூலம் ஸ்திரமற்ற அரசியலைக் கணிக்கும் அவள், ஆபத்தான நட்புகளைத் தாண்டி, தமிழக அரசியலில் பயணிக்கிறாள்.  தமிழக அரசியலின் முகத்தை விவரிக்கும் இந்தக்கதையை ZEE5 இல் ரசிகர்களுடன் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.