திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’ ஜீ5-ல் நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது!
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’. புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தினகரன்.எம் உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி தேசிய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும், நாம் கண்டுபிடிக்க முடியாத, ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.
உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?
S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார். அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில் அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.
எஸ்.எஸ். குரூப் புரொடக்ஷன் சார்பில் எஸ்.சிங்காரவேலன் தயாரித்திருக்கும் இந்த தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்.
இத்தொடர் குறித்து எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த இந்த தொடர்.” என்றார்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் தினகரன்.எம் கூறுகையில், “நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச் சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும், இந்த கிரைம் உலகின் சம்பவங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்” என்றார்.
முன்னணி நடிகர் பாலஹாசன் கூறுகையில், “வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.” என்றார்.
ZEE5 தமிழ் மற்றும் மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing லாய்டு சி.சேவியர் கூறுகையில், “‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும் உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.” என்றார்.
ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால், அதில் குற்றம் உங்களை பயமுறுத்தாது, குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.

