Apr 08, 2024 03:25 AM

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘சபரி’! - மே 3 ஆம் தேதி வெளியாகிறது

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பான் இந்தியா திரைப்படம் ‘சபரி’! - மே 3 ஆம் தேதி வெளியாகிறது

மஹா மூவிஸ் நிறுவனம் சார்பில் மகரிஷி கோண்ட்லா வழங்க, மகேந்திரநாத் கோண்ட்லா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அனில் காட்ஸ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் ‘சபரி’. பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வரும் மே மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

இப்படம் குறித்து தயாரிப்பாளர் மகேந்திரநாத் கோண்ட்லா கூறுகையில், “’சபரி’ புதுமையான கதை மற்றும் திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது. வலுவான கதைக்களத்தோடு உணர்வுப்பூர்வமான மற்றும் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுணியில் உட்கார வைக்கும்.

 

நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதோடு, தனது நடிப்பு மூலம் ரசிகர்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்துவார். தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளின் இறுதிப் பிரதிகளைப் பார்த்தவர்கள் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறியது, எங்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பிற மொழி டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ‘வேர்ல்ட் ஆஃப் சபரி’ முன்னோட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதே உற்சாகத்தோடு, ‘சபரி’ படத்தை மே 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடுகிறோம்.” என்றார்.

 

இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்க, கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க், மைம் கோபி, சுனயனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ணதேஜா, பிந்து பகிடிமரி, அஸ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா பாபி நீவே ஆனந்த், பிரமோத் ஆனந்த், சிறுமி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

அனில் காட்ஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் இணை எழுத்தாளராக சன்னி நாகபாபு பணியாற்றியிருக்கிறார். ராஜ்ய்க் ஸ்ரீவத்சவா, நானி சமிடி ஷெட்டி ஒளிப்பதிவு செய்ய, கோபி சுந்தர் இசையமைத்திருக்கிறார். மகரிஷி கோண்ட்லா கம்போசராக பணியாற்றியிருக்கிறார். ரஹ்மான் மற்றும் மிட்டபள்ளி சுரேந்தர் பாடல்கள் எழுதியுள்ளார். தர்மேந்திர ககரலா படத்தொகுப்பு செய்ய, ஆஷிஷ் தேஜா பூலாலா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். நடனக் காட்சிகளை சுசித்ரா சந்திர போஸ் மற்றும் ராஜ் கிருஷ்ணா அமைக்க, சண்டைக்காட்சிகளை நந்து - நூர் வடிவமைத்துள்ளனர்.

 

சித்தூர் ஸ்ரீனு ஒப்பனையாளராக பணியாற்ற, மானசா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். ஐயப்பா ஆடிகளை வழங்க, ஈஸ்வர் புகைப்பட பணியை கவனித்துள்ளார். லட்சுமிபதி காந்திபுடி தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்ற, வம்சி இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். சீதாராமராஜு மல்லேலா நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்ற, மகேந்திரநாத் கோண்ட்லா தயாரித்துள்ளார். பி.ஆர்.ஓ பணியை சரவணன் மற்றும் அஷ்வத் கவனிக்கின்றனர்.