May 26, 2023 12:09 PM

’1982 அன்பரசின் காதல்’ திரைப்பட விமர்சனம்

0d3d6355db16761559509869858bae2b.jpg

Casting : Aashik Merlin, Sandana Aravind, Amal Ravindran, Arunima, Harish, Sivaprakasham, Selva and Ullas Shankar

Directed By : Ullas Shankar

Music By : S.Chinthamani

Produced By : Devakanya Productions

 

நாயகன் ஆஷிக் மெர்லின் தனது கல்லூரி தோழி சந்தனா அரவிந்தை ஒருதலையாக காதலிக்கிறார். இதற்கிடையே சந்தனா அரவிந்த் யாரையோ தேடி செல்ல, துணைக்கு ஆஷிக் மெர்லின் செல்கிறார். போகும் வழியில் இருவரும் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, அவர்களை காப்பாற்றும் உல்லாஷ் சங்கர், தனது இடத்தில் தங்க வைக்கிறார். உல்லாஷ் சங்கரின் நடவடிக்கையால் அச்சமடைந்து அவரிடம் இருந்து இருவரும் தப்பிக்க முயற்சிக்க, உல்லாஷ் சங்கர் அவர்களை விடாமல் துறத்துகிறார். உல்லாஷ் சங்கர் அவர்களை எதற்காக துறத்துகிறார்?, சந்தனா அரவிந்த் யாரை தேடுகிறார்? ஆஷிக் மெர்லினின ஒருதலை காதல் என்னவானது? போன்ற கேள்விகளுக்கான விடை தான் ‘1982 அன்பரசின் காதல்’ படத்தின் மீதிக்கதை.

 

அன்பரசு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆஷிக் மெர்லின், எதையும் மண்டையில் ஏற்றாமல், எந்த நேரமும் காதலை மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கும் வேடத்திற்கு பொருத்தமாக நடித்திருக்கிறார். காதலி எதை சொன்னாலும் தட்டாமல் செய்பவர், தனது காதலின் நிலை கண்டு கலங்குவதும், அதே காதல் கைகூடி வரும் சூழலில் கொண்டாடுவதும் என்று அறிமுக நடிகர் என்பதை வெளிக்காட்டாமல் நடித்திருக்கிறார்.

 

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் அமல் ரவீந்திரன், தனது வேலை குறைவாக இருந்தாலும் அதை குறை இல்லாமல் செய்திருக்கிறார்.

 

சந்தானா அரவிந்த் மற்றும் அருணிமா ராஜ் என படத்தில் இரண்டு நாயகிகள். இருவரும் கேரளா புட்டில் செய்த லட்டு போல் இருக்கிறார்கள். நாயகிகளை சுற்றி முழு கதையும் நகர்வதால் இரண்டு பேரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்கள்.

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் உல்லாஷ் சங்கர், வில்லனுக்கான அத்தனை அம்சங்களும் நிறைந்தவராக இருக்கிறார். பார்வையிலேயே பதற வைக்கும் விதத்தில் கூர்மையான கண்களோடு, முரட்டுத்தனமான தோற்றத்தோடும் வலம் வருபவர், அதிகம் பேசவில்லை என்றாலும் படம் முழுவதும் மிரட்டுகிறார்.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ஹரிஷ் சிவபிரகாஷம், செல்வா, நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சுமதி தாஸ், முருகன் வேடத்தில் நடித்திருக்கும் தமிழன் என அனைவரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் செபாஸ்டியன் பசுமையான இடங்களில் முழு படத்தையும் படமாக்கி கண்களுக்கு விருந்தளித்திருக்கிறார். படத்தில் இடம்பெற்ற அனைத்து காட்சிகளும் பசுமையும், அழகும் நிறைந்த இடங்கள் என்பதால், எங்கு கேமரா வைத்தாலும் அழகாக தெரிகிறது.

 

இசையமைப்பாளர் எஸ்.சிந்தாமணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாகவும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் அமைந்துள்ளது. 

 

இயக்குநர் சொல்ல நினைத்த காதல் கதையை, சரியான முறையில் படத்தொகுப்பு செய்ய முடியாமல் படத்தொகுப்பாளர் கிரேசன் தடுமாறியிருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் உல்லாஷ் சங்கர், உணர்வுப்பூர்வமான காதல் கதையை 1982 -ம் காலக்கட்ட மனநிலையோடும், தற்போதைய காலக்கட்ட மனநிலையோடும் ஒப்பிட்டு சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அவருடைய திரைக்கதையில் காதலை  அழுத்தமாக சொல்லாமல் வேறு சில விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் காதல் கதை கலவரக்கதையாக மாறிவிடுகிறது.

 

இருந்தாலும், உல்லாஷ் சங்கரின் முரட்டுத்தனம் மற்றும் எந்த இளைஞரை பார்த்தாலும் கொலை வெறியோடு தாக்குவது போன்றவை படத்தை எதிர்பார்ப்போடு பார்க்க வைக்கிறது.

 

ஒரு எளிமையான கதையை மிக எளிமையான முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளுக்குள் படமாக்கியிருக்கும் இயக்குநர் உல்லாஷ் சங்கரை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். அதே சமயம், தான் சொல்ல வந்த கதையை சற்று தெளிவாக சொல்லியிருந்தால் ’1982 அன்பரசின் காதல்’படத்தை காதலர்கள் கொண்டடி தீர்த்திருப்பார்கள்.

 

ரேட்டிங் 2.5/5