May 28, 2023 09:21 AM

’2018’ திரைப்பட விமர்சனம்

6a0c5e50c9c018a1b3d84c8150e940ca.jpg

Casting : Tovino Thomas, Kunchacko Boban, Asif Ali, Vineeth Sreenivasan, Lal, Narain, Kalaiyarsan, Ramesh Thilak

Directed By : Jude Anthany Joseph

Music By : Nobin Paul, William Francis

Produced By : Venu Kunnappilly, C. K. Padma Kumar, Anto Joseph

 

கேரளாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த கன மழையால் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சுமார் 14 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் பலியானதோடு, 15-க்கும் மேற்பட்டவர்கள் மாயமானார்கள். 100 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு கேரளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நிஜ சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் தான் 2018’. மே 5 ஆம் தேதி மலையாளத்தில் வெளியான இப்படம், தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

 

குஞ்சன்கோ போபன், டொவினோ தாமஸ், லால், வினித் ஸ்ரீனிவாசன், நரேன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களோடு, தமிழ் சினிமா பிரபலங்களான கலையரசன், ரமேஷ் திலக் என ஏராளமான நடிகர்கள் கதைக்கான கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள்.

 

ராணுவத்தில் பணியாற்றி பாதியில் திரும்பி வந்த டொவினோ தாமஸ் வெளிநாட்டுக்கு வேலைக்கு போவதற்கான முயற்சியில் இருக்கிறார். மறுபுறம் வினித் ஸ்ரீனிவாசன் தனது மனைவியுடனான பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்கிறார். வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் குஞ்சன்கோ போபன், தனது கனவு வீட்டை கட்டுகிறார். இப்படி ஒவ்வொருவரும் தங்களது எதிர்கால கனவுகளோடு வாழ்ந்துக்கொண்டிருக்க, 2018 ஆம் வருடம் ஏற்பட்ட மழை வெள்ளம் இவர்களின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும், வெள்ளத்தை மக்கள் எப்படி எதிர்கொண்டார்கள்? என்பதை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தி சொல்வதே ‘2018’ படத்தின் கதை.

 

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோக்களாக இருந்தாலும், இந்த படத்தில் கதாபாத்திரங்களாக நடித்து மனதில் நிற்கிறார்கள். டொவினோ தாமஸ், வினித் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், நரேன், கலையரசன், ரமேஷ் திலக் என அனைவருடைய இயல்பான நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜ், முதல் பாதி முழுவதும் கேரளாவின் அழகில் நம்மை மூழ்கடிக்கிறார். இரண்டாம் பாதியில் மழை வெள்ளத்தில் மூழ்கடித்து மூச்சு முட்ட வைக்கிறார். முதல் பாதியில் இடம்பெறும் மழை காட்சிகள் படம் பார்ப்பவர்களும் மழையில் நனைவது போன்ற உணர்வை கொடுக்க, இரண்டாம் பாதியில் வீடுகளை சூழ்ந்த வெள்ள காட்சிகள் திக் திக் நிமிடங்களாக பயணிக்கிறது.

 

நொபின் பவுல் மற்றும் வில்லியம் பிரான்சிஸ் ஆகியோர் இசையில் இடம்பெற்ற பாடல்கள் இதமாக இருக்கிறது. பின்னணி இசை மழை போல் ரசிக்க கூடியதாக இருக்கிறது. எந்த ஒரு இடத்திலும் அதிகபடியான சத்தத்தோடு கூடிய பீஜியம்களை பயன்படுத்தாமல் மனதை வருடம் விதத்தில் பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

 

நிஜ சம்பவம் அதை சுற்றி நடக்கும் மனிதர்களின் வாழ்க்கை இவை இரண்டை மட்டுமே வைத்துக்கொண்டு எழுதப்பட்ட திரைக்கதை மற்றும் காட்சிகளை ரசிக்கும்படி மிக சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சக்கோ.

 

கலை இயக்குநர் மோகன் தாஸின் பணி வியக்க வைக்கிறது. அவருக்கு தேசிய விருது கிடைப்பது உறுதி. படத்தில் எது செட், எது ஒரிஜினல் என்று கண்டுபிடிக்காதபடி அனைத்தும் மிக தத்ரூபமாக இருக்கிறது. அதேபோல், கிராபிக்ஸ் பணியும் மிக சிறப்பாக இருக்கிறது. இப்படி ஒரு கிராபிக்ஸ் காட்சிகளை நிச்சயம் வேறு எந்த படத்திலும் பார்த்திருக்க முடியாது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளை காட்டும் காட்சிகள் மிரள வைக்கிறது.

 

தமிழ் வசனங்களை ஸ்ரீஜா ரவி எழுதியிருக்கிறார். மலையாள டப்பிங் படம் பார்க்கும் உணர்வே ஏற்படாத வகையில் இயல்பான வார்த்தைகளை கொண்டு அவர் எழுதியிருக்கும் வசனங்கள் எளிமையாக இருந்தாலும் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் ஜூட் அந்தோணி ஜோசப், மிக சவாலான ஒரு கதைக்களத்தை சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாக படத்தை தரமானதாக இயக்கியிருந்தாலும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்களிடம் மிக இயல்பாக வேலை வாங்கி அவர்களையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்துவிடுகிறார்.

 

படத்தின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ் வெள்ளப் பெருக்கில் சிக்கிய மக்களை காப்பாற்றுவதும், பிறகு திடீரென்று அவர் மாயமாகிவிடுவதும், இறுதியில் அவருக்கு என்ன நடந்தது? என்பதை காட்டும் போதும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துவிடும்.

 

வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடிய மக்களின் வலிகளை படம் பார்ப்பவர்கள் உணரும் வகையில் நடித்திருக்கும் நடிகர்களும், வெள்ளப்பெருக்கு படி படியாக உயரும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் என இரண்டு தரப்பினரும் படத்தை சுமந்திருக்கிறார்கள்.

 

2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போலவே இந்த வெள்ளப் பெருக்கும் அமைந்திருப்பதால் சென்னைவாசிகள் இந்த படத்துடன் மிக எளிதாக தங்களை தொடர்புப்படுத்தி கொள்ள முடியும். அதே சமயம், இப்படி ஒரு சம்பவத்தை எதிர்கொள்ளாதவர்கள், நிச்சயம் இந்த படத்தை பார்த்தால் வியப்படைவதோடு, வெள்ளப் பெருக்கின் அபாயத்தை எண்ணி அச்சமடைவது உறுதி.

 

மொத்தத்தில், ’2018’ மக்கள் மனதை மட்டும் இன்றி பல விருதுகளையும் வெல்லப்போவது உறுதி.

 

ரேட்டிங் 4/5