Jun 20, 2023 09:04 AM

’அஸ்வின்ஸ்’ திரைப்பட விமர்சனம்

ec6c986f11f5e6fe4cc629141ad496d0.jpg

Casting : Vasanth Ravi, Vimala Raman, Saraswathi Menon, Muralidaran, Udhayadeep, Simran Pareek

Directed By : Tarun Teja

Music By : Vijay Siddharth

Produced By : Bapineedu.B, BVSN Prasad

 

லண்டனில் உள்ள தீவில் ஆடம்பரமான பங்களா ஒன்று இருக்கிறது. அதில் வாழ்ந்த பிரபல தொல்பொருள் ஆராய்ச்சியாளரான பிரியா ராமன், அங்கிருந்த 15 ஊழியர்களை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கைப்பற்றப்பட்ட அவருடைய சடலம் திடீரென்று மாயமாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவரது சடலம் எப்படி மாயமானது, எங்கிருக்கிறது என்பது இதுவரை புரியாத புதிராக இருப்பதோடு, அந்த பங்களாவில் பல அமானுஷ்ய விஷயங்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

 

இப்படிப்பட்ட பங்களாவையும், அதன் முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக நாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் அமானுஷ்ய விஷயங்களும், அதன் பின்னணியையும் சுவாரஸ்யமாக மட்டும் இன்றி நொடிக்கு நொடி திகிலடைய செய்யும் விதத்தில் சொல்வது தான் ‘அஸ்வின்ஸ்’.

 

புராணத்தில் உள்ள அஸ்வின் கடவுளர்கள் பற்றிய சிறு கதையை மையமாக எடுத்துக்கொண்டு, மிரட்டும் வகையிலான திகில் திரைக்கதையை, ரசிகர்கள் காட்சிக்கு காட்சி மிரட்சி அடையும் வகையில் சொல்லியிருக்கிறார்கள்.

 

நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. வசனம் அதிகம் இல்லை என்றாலும், நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கும் வசந்த் ரவி, படத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறார்.

 

சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை தரமாக செய்திருக்கிறார்கள். பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் குரல், படம் முடிந்த பிறகும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

 

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்திற்கு 200 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். கருப்பாக வந்து இருட்டில் மிரட்டுவதும், தீய சக்தியின் கட்டுப்பாட்டில் ஆக்ரோசமாக பயணிப்பதும் என்று அசத்துபவர், இறுதிக் காட்சியில் தனது நடிப்பு மூலம் படம் பார்ப்பவர்களின் இதய துடிப்பை எகிற வைத்துவிடுகிறார்.

 

நடிகர்களின் நடிப்பு கதைக்களத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும் நாயகர்களாக ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். 

 

100 ஆண்டுகளுக்கு பிறகு பெய்த பேய் மழை போல், பல வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான அதே சமயம் புது விதமான அனுபவத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கும்  திகில் காட்சிகளும், பின்னணி இசையும் மிரட்டுகிறது.

 

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டிருக்கிறார். எந்த இடத்திலும் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் கதாபாத்திரங்களின் பயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு படம் பார்ப்பவர்களையும் அச்சப்பட வைத்திருப்பவர், அந்த பயங்கர பங்களா அமைந்திருக்கும் தீவையும், அந்த தீவின் அதிசயத்தையும் நம் கண்களைவிட்டு மறையாத வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் விஜய் சித்தார்த்தின் பின்னணி இசையும், சச்சின் மற்றும் ஹரி ஆகியோரது ஒலிக்கலவையும் மாய வித்தை நடத்தியிருக்கிறது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு ஒலியும் இயல்பான திகில் படங்களுக்கானதாக அல்லாமல் நம்மை கவனிக்க வைக்க கூடிய அதே சமயம் கதற வைக்க கூடிய விதத்தில் மிக துல்லியமாக அமைந்திருக்கிறது.

 

படத்தொகுப்பாளர் வெங்கட் ராஜன், படம் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே நம்மை இருக்கையில் கட்டி போடும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே, நம்மை அலறவிடுபவர், அதன் பிறகு கதைக்குள் நம்மையும் பயணிக்க வைத்து கவனம் ஈர்க்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் தருண் தேஜா, குறும்படமாக எடுத்த ஒரு கதையை முழு நீள திரைப்படமாக எடுத்து மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். தொழில்நுட்ப ரீதியாக ஒரு திகில் படத்தை எப்படி கையாள வேண்டும் என்ற வித்தையை மிக சிறப்பாக செய்திருப்பவர், ஒவ்வொரு காட்சியை மட்டும் அல்ல, ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிக்ரகள் கவனிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் தனி சிறப்பு.

 

அஸ்வினர்கள் கதையை வைத்துக்கொண்டு ஒரு முழுமையான திகில் திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் தருண் தேஜா, இரண்டு மணி நேரம் நமது மூளையை தன் வசப்படுத்திக் கொண்டு, படத்துடன் நம்மையும் பயணிக்க வைக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘அஸ்வின்ஸ்’ எளிமையான திகில் கதையாக இருந்தாலும், அதனை தொழில்நுட்ப ரீதியாக சொல்லியிருக்கும் விதம், ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தோடு, இதுவரை பார்த்திராத ஒரு திகில் அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்.

 

ரேட்டிங் 4.5/5

 

குறிப்பு : பத்திரிகையாளர்களுக்காக முன் கூட்டியே திரையிட்டு காட்டப்பட்ட ‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் வரும் ஜூன் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.