Oct 28, 2022 06:54 AM

’காலங்களில் அவள் வசந்தம்’ திரைப்பட விமர்சனம்

4dfee027980f81b6eb94b0e135435f7a.jpg

Casting : Kaushik Ram, Anjali, Heroshini, Mathew Varghese, Jaya Swaminathan, Swaminathan, RJ Vigneshkanth, Anitha Sampath

Directed By : Raghav Mirdath

Music By : Hari S R

Produced By : Sri studios, Aram Entertainment

 

நாயகன் ராம் திகட்ட திகட்ட காதலித்து திருமணம் செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருக்கிறார். இதற்காக அவர் பல பெண்களை காதலித்தாலும் எந்த காதலும் அவருக்கு திருப்தி கொடுக்கவில்லை. இதற்கிடையே, நாயகன் கெளசிக் ராமை கண்டதும் காதல் கொள்ளும் அஞ்சலி, அவரை திருமணமும் செய்துக்கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு நாயகன் கெளசிக் ராம் மனைவியை திகிட்ட திகிட்ட காதலிக்கிறார். ஆனால், அஞ்சலியோ உன்னுடைய காதல் செயற்கைத்தனமாக இருக்கிறது, மனதளவில் நீ காதலிக்கவில்லை, என்று சொல்லிவிடுகிறார். இதனால் அதிருப்தியடையும் நாயகன் என்ன செய்தார்? இவர்களுடைய வாழ்க்கையில் உண்மையான காதல் வந்ததா? இல்லையா? என்பதை கவிதை போல் சொல்வது தான் ‘காலங்களில் அவள் வசந்தம்’.

 

நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கெளசிக் ராம், முதல் படம் போல் அல்லாமல் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சுறுசுறுப்பான நடிப்பு, ஆட்டம், பாட்டம், ஆக்‌ஷன் என அனைத்திலும் தன்னை நிரூபித்திருப்பவர் சில இடங்களில் தனது இயல்பான நடிப்பு மற்றும், மனைவி மீது காட்டும் காதலால் வெகுவாக கவர்கிறார்.

 

நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், காட்சிக்கு காட்சிக்கு படத்தை ரசிப்பதற்கான காரணமாக வருகிறார். எளிமையான அழகோடும், பார்த்ததும் ஈர்க்கும் வசீகரத்தாலும் படம் பார்ப்பவர்களை வசியம் செய்பவர், கணவனின் அன்புக்காக ஏங்கும் காட்சிகளில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.

 

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் ஹீரோஷினி வெகுளித்தனமான நடிப்பு, வெள்ளந்தியான பேச்சு என்று கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு, கொடுத்த வேலையை குறையில்லாமலும் செய்திருக்கிறார்.

 

லொள்ளு சபா சுவாமிநாதன், விக்னேஷ்காந்த், அனிதா சம்பத், நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் மேத்தீவ் வர்கீஸ், அம்மாவாக நடித்திருக்கும் ஜெயா சுவாமிநாதன் ஆகியோர் சில இடங்களில் சிரிக்க வைப்பதோடு, சிந்திக்கவும் வைக்கிறார்கள்.

 

கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காட்சிகளை மட்டும் இன்றி கதாபாத்திரங்களையும் அழகாக காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கும் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

 

இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். அதிலும் “பப்பாளி...” பாடல் முனுமுனுக்க வைக்கிறது. பின்னணி இசை ஆரம்பத்திலேயே நம் மனதை ஈர்க்க, க்ளைமாக்ஸ் அவரை காட்சிகளுக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணிக்கிறது.

 

படத்தொகுப்பாளர் லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு நேர்த்தி. படத்தை தொய்வில்லாமல் நகர்த்துவதற்கு இவருடைய படத்தொகுப்பு பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

 

காதலை மையமாக கொண்டு எத்தனை படங்கள் வந்தாலும், ரசனையோடு சொல்லப்படும் காதல் படங்களை ரசிகர்கள் ரசிக்க தவறியதில்லை. அந்த வகையில், உண்மையான காதல் என்றால் என்ன? என்பதை காதலர்களுக்கு மட்டும் இன்றி, கணவன் - மனைவிக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.

 

சில இடங்களில் நாயகனின் காதலைப் போல் சில காட்சிகள் சினிமாத்தனமாக இருப்பது படத்திற்கு சற்று பலவீனமாக இருந்தாலும், நாயகி அஞ்சலி நாயரின் ஏக்கம் மற்றும் தவிப்பை காட்டி பலவீனத்தை இயக்குநர் சரிக்கட்டி விடுகிறார்.

 

உயிரை கொடுப்பது தான் உண்மையான காதல், என்று சொல்பவர்களுக்கு மத்தியில் உண்மையான காதல் என்றால் என்ன? என்பதை வேறு கோணத்தில் காட்ட முயற்சித்திருக்கும் இயக்குநர் ராகவ் மிர்தாத், கெளசிக் ராம், அஞ்சலி நாயர் மற்றும் ஹீரோஷினி ஆகிய கதாபாத்திரங்களின் உதவியோடு அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், ‘காலங்களில் அவள் வசந்தம்’ இனிமை

 

ரேட்டிங் 3/5