Aug 14, 2017 07:51 AM

கவிஞர் நா.முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

கவிஞர் நா.முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றதோடு, தனது இனிமையான வரிகளால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமாரின் முதலாவது நினைவு தினம் இன்று (ஆக.14) அனுசரிக்கப்படுகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கவிஞர் நா.முத்துக்குமார், திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியதோடு, ’பட்டாம்பூச்சி விற்பவன்’, ’நியூட்டனின் மூன்றாம் விதி’ உள்ளிட்ட பல கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். உறவுகள் குறித்து ஆனந்த விகடனில் வெளிவந்த அணிலாடும் முன்றில், என்ற இவரது தொடர் கதை மிகவும் பிரபலமானது.

 

தங்கமீன்கள், சைவம் ஆகிய படங்களுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற நா.முத்துக்குமார், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டில் அதிகப் பாடல்கள் எழுதிய பாடலாசிரியர் என்ற சாதனையை நிகழ்த்திக்கொண்டு இருந்தார்.

 

இதற்கிடையே, உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நா.முத்துக்குமார், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலமானார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

நா.முத்துக்குமார் மறைந்தாலும், “ஆனந்த யாழை மீட்டுகிறாள்...” உள்ளிட்ட அவரது பாடல் வரிகளும், கவிதை தொகுப்புகளும் மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.