Aug 27, 2017 03:59 PM

எம்.ஜி.ஆர் போல நானும் தயாராக இருக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்!

எம்.ஜி.ஆர் போல நானும் தயாராக இருக்கிறேன் - நடிகர் ரஜினிகாந்த்!

தென்னிந்திய ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டது. 

 

இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், சிவக்குமார், பாலகிருஷ்ணா, சூர்யா, விஷால், கார்த்தி, பாக்யராஜ், விவேக், ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், ஜீவா, விஜயசேதுபதி, ஆர்யா, பிரசாந்த், தியாகராஜன், சிபிராஜ், விக்ரம் பிரபு, தனுஷ், சூரி, மயில்சாமி, மற்றும் ஐஸ்வர்யா தனுஷ், சவுந்தர்யா, நடிகைகள் சுகாசினி, டாப்சி, ரம்யா நம்பீசன், விஷ்ணுமஞ்சு, ஸ்ரேயா, நிக்கி கல்ராணி, மாலாஸ்ரீ, கேத்தரின் தெரசா, இனியா, பூர்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர்கள் கஜேந்திரன், தரணி, பிரவீண்காந்த், எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், தேனப்பன், சித்ரா லட்சுமணன், எச்.முரளி, ராஜேஷ், எஸ்.ஏ.ராஜ்குமார், ஸ்டண்ட் கலைஞர்கள் சங்க தலைவர் அனல் அரசு, செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்துக்கு நடிகர் சிவகுமார் ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். மூத்த ஸ்டண்ட் கலைஞர்களும், ஸ்டண்ட் மாஸ்டர்களும், கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். காஜல் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் நடனம் இடம்பெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ”உலகம் முழுவதும் ஆக்‌ஷன் படங்களுக்குத்தான் மரியாதை அதிகம். திரையில் இதை கொண்டு வருவதற்காக ஸ்டண்ட் இயக்குநர்கள், கலைஞர்கள் வியர்வையை மட்டுமல்ல, ரத்தம் சிந்தி உழைக்கிறார்கள். உடல் உழைப்புதான் இவர்களது மூலதனம். இவர்களது உழைப்பால் தான் நடிகர்களுக்கு பெயர் கிடைக்கிறது.

 

இந்த சங்கத்தை எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். அவரது நூற்றாண்டு விழாவின் போது இந்த சங்கத்தின் பொன் விழாவும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எம்.ஜி.ஆர் நடிப்பை விட்ட பிறகு ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பல்வேறு விதங்களில் உதவி செய்தா. நானும் அவர்களுக்கு உதவ எப்போதும் தயராக இருக்கிறேன். என்னிடம் கேட்டால் எந்த உதவியும் நான் நிச்சயம் செய்வேன். என் வீட்டு கதவுகள் உங்களுக்காக திறந்தே இருக்கும். இச்சங்கம் மேலும் வளர, அதில் உழைப்பவர்கள் அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்தார்.