மக்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகரின் கண்ணீர் வாழ்க்கை!

ரசிகர்களை சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்கள் பலரது வாழ்க்கை ரொம்பவே சோகமானதாகவோ அல்லது அவர்கள் பல சோகமான சூழ்நிலையை எதிர்கொண்டோ வாழ்ந்து வருவது பலருக்கு தெரிவதில்லை. அத்தனை சோகங்களையும் தங்களுக்குள் மறைத்து, மக்களை சிரிக்க வைத்து மகிழ்விப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். அப்படி ஒரு காமெடி நடிகரைப் பற்றி தான், நாம் இங்கே பார்க்க போகிறோம்.
அவர் தான் போண்டா மணி. கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் கே.பாக்யராஜ் மூலம் சினிமாவில் அறிமுகமான போண்டா மணி, தொடர்ந்து பொன்விலங்கு, ராவணன், பாட்டு பாடவா, அறுவா வேலு, காலம் மாறி போச்சு, வின்னர் உள்ளிட்ட சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். தற்போதும் பல படங்களில் நடித்து வரும் போண்டா மணி, பிறந்து வளர்ந்தது இலங்கை. யுத்தம் காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்த அவர், யுத்தத்தில் தவறவிட்ட தனது அம்மா என்ன ஆனார்கள், என்பது குறித்து தெரியாமல் இன்றும் தவித்துக் கொண்டிருக்கிறார். தமிழகம் வந்து சினிமாவில் நடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல இன்னல்களை எதிர்கொண்டவர், தற்போது மக்களுக்கு தெரிந்த முகமாக பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும், அவர் இன்னமும் அகதி வாழ்க்கை தான் வாழ்கிறார் என்பது பெரும் சோகம்.
ஆம், போண்டா மணி என்னதான் சினிமாவில் பிஸியான நடிகராக இருந்தாலும், அவரை தமிழக அரசு அகதியாகவே வைத்திருக்கிறதாம். அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படவும் இல்லை. இதனால், வெளிநாடுகளில் படப்பிடிப்பு வைத்தால் போண்டா மணியால் செல்ல முடிவதில்லை. மேலும், வெளிநாடுகளில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்காகவோ அல்லது தமிழ் அமைப்புகள் நடத்தும் விழாக்களிலும் பங்கேற்க முடியாமல் தவிக்கும் போண்டா மணி, இலங்கையில் இருக்கும் தனது உடன் பிறந்தவர்கள், சொந்த பந்தங்கள் என்ன ஆனார்கள், என்பது குறித்து கூட தெரிந்துக்கொள்ளாமல் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறார்.
தமிழகத்திற்கு வந்து 28 ஆண்டுகள் ஆகி, தான் மக்கள் அறிந்துகொள்ளும் நடிகரானாலும், இன்னமும் தான் ஒரு அகதியாக இருப்பது தனக்கு பெரும் வேதனையாக இருப்பதாக கூறும் போண்டா மணி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். அவரது அறிவிப்பை தமிழக அரசும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் நிறைவேற்றி என்னை போன்ற இலங்கை தமிழர்களை காக்க வேண்டும், என்று கோரிக்கை வைத்துக்கொள்வதாகவும், தெரிவித்திருக்கிறார்.
கஞ்சா கருப்புடன் இணைந்து போண்டா மணி நடித்திருக்கும் ‘பயங்கரமான ஆளு’ கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அரசர ராஜா இயக்கி, தயாரித்து ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தின் விமர்சனத்தில் போண்டா மணியின் காமெடி காட்சிகளை ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.