Apr 13, 2019 01:44 PM

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மரணம்! - அதிர்ச்சியில் கோலிவுட்

நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்தீஷ் திடீர் மரணத்தால், தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கி நடித்த ‘கானல் நீர்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜே.கே.ரித்தீஷ், தொடர்ந்து ’நாயகன்’, ‘பெண் சிங்கம்’ என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், தனது பண பலத்தால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உருவெடுத்தார்.

 

பிறகு அரசியலில் நுழைந்தவர், திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியில் எம்.பி ஆனார். அதன் பிறகு திமுக வில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளராக செயல்பட்டவர், பிறகு திமுக-வில் இருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார்.

 

ராதாரவியின் கோட்டையாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், விஷால், நாசர் மற்றும் கார்த்தி அணியின் வெற்றி பெறுவதற்கு ரித்தீஷ் முக்கியமானவராக இருந்தார். சிறிது காலத்தில் விஷாலுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தவர், வர இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் ராதாரவியுடன் இணைந்து போட்டியிடவும் முடிவு செய்திருந்தார்.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த ‘எல்.கே.ஜி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ரித்தீஷ், நல்ல படங்களாக அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன், என்றும் கூறினார்.

 

இந்த நிலையில், திடீர் நெஞ்சுவலி காரணமாக ராமநாதபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜே.கே.ரித்தீஷ், சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

46 வயதாகும் ஜே.கே.ரித்தீஷுக்கு ஜோதீஸ்வரி என்ற மனைவியும், ஆரிக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர்.