Dec 22, 2017 07:31 AM

விமலால் அரவிந்த்சாமி படத்திற்கு வந்த சிக்கல்!

விமலால் அரவிந்த்சாமி படத்திற்கு வந்த சிக்கல்!

அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மலையாளப் படத்தின் ரீமேக்கான இப்படத்தை சித்திக் இயக்கியுள்ளார். தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தை ஜனவரி மாதம் ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 

இந்த நிலையில், இப்படத்திற்கு எதிராக நடிகர் விமல் தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தில் அளித்த புகாரை தொடர்ந்து, இப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

விமல் அளித்த புகார் மனுவில், “நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடமிருந்து 25 லட்சமும், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து 65 லட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.

 

நான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால் நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

 

இந்நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

 

விமலின் இந்த புகாரால் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ஜனவரி மாதம் ரிலிஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.