Mar 29, 2019 04:47 AM

விவசாயத்தின் முக்கியத்துவத்தை பேசும் ஹாரர் படம் ‘ஈவர் கரவாது’

விவசாயத்தின் முக்கியத்துவத்தை பேசும் ஹாரர் படம் ‘ஈவர் கரவாது’

தமிழ் சினிமாவில் தற்போதைய டிரெண்ட் என்றால் ஹாரர் படம் தான். மினிமம் கியாரண்டி, என்பதால் பெரிய ஹீரோக்கள் முதல் அறிமுக ஹீரோக்கள் வரை ஹாரர் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருவதால், வாரத்தில் ஒரு ஹாரர் படமாவது கோடம்பாக்கத்தில் வெளியாகிறது. ஆனால், இதில் வித்தியாசத்தை கையாளும் ஹாரர் படங்கள் மட்டுமே ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமாகிறது.

 

அந்த வகையில், ஹாரர் படமாக இருந்தாலும், அதில் விவசாயத்தின் முக்கியத்துவத்தையும், விவசாயிகளின் தற்போதை தேவை எது, என்பதையும் பேசும் படமாக உருவாகிறது ‘ஈவர் கரவாது’. தலைப்பை படித்ததும் ஷாக்காக வேண்டாம், திருக்குறளில் இடம்பெறும் வார்த்தை தான் இந்த ‘ஈவர் கரவாது’. இதற்கு அர்த்தம், அத்தனையையும் கொடுப்பான் விவசாயி, என்பது தான்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி பி.டி.ஜிஜு இயக்குகிறார். இவர் ‘தியா’, ‘கந்தக்கோட்டை’ போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதோடு, பல குறும்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

 

இப்படத்தின் முக்கிய வேடங்களில் ஹரி, சரத், இளம்பரிதி, சரவணன், சினேகா ஆகியோர் நடிக்க, விவசாயியாக விஜேயந்திரர் நடிக்கிறார்.

 

ஹரிஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரவி ஜே.மேனன் இசையமைக்கிறார். மகேஷ் குமார் எடிட்டிங் செய்ய, ராஜேஷ் நடனம் அமைக்கிறார். சோபியா தயாரிக்கிறார்.

 

படம் குறித்து இயக்குநர் ஜிஜுவிடம் கேட்டதற்கு, “விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும், என்று பலர் பேசினாலும், தற்போதைய சூழலில் முக்கியமாக காப்பாற்ற வேண்டியது விவசாய நிலங்களை தான். விவசாய நிலங்கள் இருந்தால் தான் விவசாயம் செய்ய முடியும் என்பதால், நிலங்களை நாம் காப்பாற்ற வேண்டும், என்பதை தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். அதை காமெடி, காதல் என்று கமர்ஷியலான விஷயங்களோடு, ஹாரார் ஜானரிலும் சொல்கிறோம்.

 

விவசாயத்திற்கு சம்மந்தமில்லாத சில இளைஞர்கள் பணத்திற்காக கிராமம் ஒன்றுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பிளாஷ்பேக் ஒன்றை தெரிந்துக் கொண்டு, தங்களது மனதை மாற்றிக் கொள்வதோடு, விவசாயம் மூலம் பணம் சம்பாதிக்க முடிவு செய்யும் அவர்கள், விவசாயத்தில் எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டு வருகிறார்கள், என்பது தான் படத்தின் கதை.

 

பொதுவாக பிளாஷ்பேக் என்பது யாராவது சொல்லும்படி தான் படங்களில் வந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் வரும் பிளாஷ்பேக் போர்ஷனை யாரும் சொல்ல மாட்டார்கள். அது தானாகவே, அந்த இளைஞர்களுக்கு தெரிய வரும், அது எப்படி என்பதை வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறோம்.” என்றார்.

 

பொதுவாக முதல் படம் என்றாலே கமர்ஷியல் ஜானரில் தான் இயக்குநர்கள் எடுப்பார்கள், நீங்கள் ஏன் விவசாயம் சார்ந்து எடுத்தீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, “நான் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன் தான், எனக்கும் விவசாயம் எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என்பது தெரியும். கமர்ஷியலாக படம் பண்ணுவதோடு, அதில் நல்ல விஷயங்களையும் சொல்ல வேண்டும், என்று தோன்றியது. அதனால் தான் விவசாயத்தை கையில் எடுத்திருக்கிறேன்.” என்றார்.

 

Evar Karavathu

 

தற்போது முழு படப்பிடிப்பையும் முடித்துவிட்டு பின்னணி வேலைகளில் பிஸியாகியிருக்கும் ‘ஈவர் கரவாது’ படத்தில் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.