அரசியல் கட்சிகளுக்கு திடீர் எச்சரிக்கை விடுத்த இளையராஜா!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் நடிகைகளை பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. மேலும், சில கட்சிகள் பிரசார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களை, அவர்களது அனுமதி பெறாமலே பயன்படுத்தியும் வருகிறார்கள். இதை அறியும் சம்மந்தப்பட்ட நடிகர்கள், அது குறித்து விளக்கம் அளிப்பதோடு, கட்சியிடம் இனி புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம், என்று அறிவுறுத்துவார்கள்.
தேர்தல் காலங்களில் நடிகர்கள் மட்டுமே சந்தித்து வந்த இந்த பிரச்சினை முதல் முறையாக இசையமைப்பாளர் இளையராஜா சந்தித்துள்ளார்.
வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில், இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த இளையராஜா தரப்பு, இது சர்ச்சையாக வெடிப்பதற்குள் இதனை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, “சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துகின்றனர். எந்த அரசியல் கட்சிகளும் அவரது பெயரையோ அல்லது அவரது புகைப்படத்தையோ அரசியல் லாபத்திற்காக பயன்படுத்த வேண்டாம்.” என்று இளையராஜா அறிவித்துள்ளார்.