Jan 11, 2019 05:47 PM

தமிழக முதல்வரை சீண்டிய கே.பாக்யராஜ்! - பட விழாவில் பரபரப்பு

தமிழக முதல்வரை சீண்டிய கே.பாக்யராஜ்! - பட விழாவில் பரபரப்பு

சின்ன படமோ, பெரிய படமோ தன்னால் முடிந்த உதவியை செய்யும் ஒரே நபர் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் தான் என்று ஒட்டு மொத்த கோடம்பாக்கமே சொல்லும் அளவுக்கு, அனைத்து திரைப்பட விழாக்களிலும் பங்கேற்று வரும் கே.பாக்யராஜ், தான் உண்டு, தனது கதையுண்டு பட விழாக்களில் பேசி வந்த நிலையில், ‘கிருஷ்ணம்’ என்ற பட விழாவில் அரசியல் பேசியதோடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கிண்டலடித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பி.என்.பலராம் என்ற தொழிலதிபரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இந்த ‘கிருஷ்ணம்’ படத்தை அவரே தயாரித்து சினிமாவில் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை தினேஷ் பாபு ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார். பி.என்.பி சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று இரவு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல்கள் குறுந்தகடை வெளியிட்டார்.

 

விழாவில் தயாரிப்பாளர் பி.என்.பலராம் பேசும் போது, “இது என் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புத அனுபவம். என் மகன் அக்ஷய் கிருஷ்ணனுக்கு ஒரு நோய் வந்து பெரும்பிரச்சினையாகி அவனால் பிழைக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அவன் பிழைப்பதற்கு  ஒரு சதவிகிதம் தான் உள்ளது. ஆபரேஷன் பெயிலியர் ஆவதற்கு 99 சதவிகிதம் உள்ளது என்றார்கள்.நான் அந்த ஒரு சதவிகிதத்தை குருவாயூரப்பன் மீதுள்ள நம்பிக்கையில் முழுதுமாக நம்பினேன். அப்படி ஒரு நம்பிக்கை. பயப்படவே இல்லை. என் மகன் பிழைத்து விட்டான். எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். சொன்னால் யாரும் நம்பவில்லை . ஆனால் என் வாழ்வில் நடந்த இந்த அற்புதத்தைப் பலரும் அறிய வேண்டுமல்லவா? அதற்காகவே  படமாக எடுத்து குருவாயூரப்பனின் மஹிமையை உலகிற்குக் காட்ட விரும்பினேன். இது எல்லாருக்கும் தெரிய வேண்டும் என்றே இப்படத்தை எடுத்து இருக்கிறேன்.” என்றார்.

 

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசுகையில், “குருவாயூர் கடவுளின் அதிசயத்தை சொல்லும் படமாக இப்படம் உருவாகியிருப்பதோடு, அந்த கடவுளின் அருளால் நடந்த அதிசத்தை உலகிற்கு சொல்லும் படமாகவும் இப்படம் உருவாகியிருப்பதாக சொன்னார்கள். குருவாயூர் அருள் தமிழகத்தில் இருப்பவருக்கு கிடைத்தது என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான். நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு அவர் உயரத்திற்கு சென்றுவிட்டார். விரைவில் தேர்தல் வேறு வரப்போகிறது, அந்த தேர்தலில் யார் யாருக்கு குருவாயுரப்பன் அருள் கிடைக்கப் போகிறது, என்று பார்ப்போம்.

 

இங்கே திரையிடப்பட்ட காட்சிகளையும் பாடல் காட்சிகளையும் பார்க்கும் போது தினேஷ்பாபு  இயக்குநர் என்பதை விட ஒளிப்பதிவாளராக கவனிக்க வைக்கும்படி சிறப்பாகச் செய்திருக்கிறார். இந்த 'கிரிஷ்ணம்' படம் உண்மைச் சம்பவம் என்று தயாரிப்பாளர் விரிவாகக் கூறினார். இதைக் கேள்விப்பட்டதுமே அந்தக் கதையின் நாயகன் அக்ஷய் கிருஷ்ணனைப் பார்க்க ஆவலாக இருந்தேன். நிஜமாகேவே இது அற்புதமான சம்பவம் தான். கற்பனைக் கதைக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உண்மைக்கதை என்றால் மனசுக்கு நெருக்கமாக இருக்கும். பார்ப்பவர் தங்களையும் அதில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும். அப்படி ஒரு படமாக குருவாயூரப்பன் அருள் பற்றிப் பேசும் படமாக 'கிரிஷ்ணம்' படமும் இருக்கும் என நம்புகிறேன்.

 

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்பட கிரிஷ்ணம் குழுவினர் கேரளாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்களை வரவேற்போம். நம் தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எங்கும் வரவேற்பு இருக்கிறது. இவர்களையும் வரவேற்போம்.” என்றார்.

 

Krishnam Audio Launch

 

விழாவில் தயாரிப்பாளர் சங்கத்தின் ( கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் ,இயக்குநர் தினேஷ்பாபு ,நாயகன் அக்ஷய் கிருஷ்ணன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு. துளசி பழனிவேல்,  மற்றும் 'கிரிஷ்ணம் ' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக விழாவில் செண்டை மேளம் முழங்க கதகளி நடனம்' சிங்காரி நடனம் என நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.