இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் பற்றி பேசும் ‘நிக்கிரன்’!

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் படம் ‘நிக்கிரகன்’. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக, ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம்.
நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வுகள் போல தோன்றும் ஒரு விஷயம், ஒரு மனிதனின் வாழ்வையே மாற்றிப் போடும் வல்லமை படைத்தது என்பதை இத்திரைப்படம் ஜனரஞ்சகமான காட்சி அமைப்புகளுடன், சரி விகிதத்தில் திகிலும் கலந்து விருந்தாக்குகிறது.
அரவிந்த் ஜே ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சனாதன் இசையமைக்கிறார். வினோத் ஜாக்சன் & ஷாஹித் ஆகியோர் படத்தொகுப்பு செய்யும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.