Mar 07, 2019 06:14 AM

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர்.அம்பேத்கர் இன்றும் நாளையும்’!

இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கும் ‘பி.ஆர்.அம்பேத்கர் இன்றும் நாளையும்’!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தை தயாரிக்கும் பா.இரஞ்சித், மேலும் சில திரைப்படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

இந்த நிலையில், மும்பையை சேர்ந்த ஆவணப் பட இயக்குநர் ஜோதி நிஷாவுடன் இணைந்து ‘பி.ஆர்.அம்பேத்கர் - இன்றும் நாளையும்’ என்ற ஆவணப் படத்தை இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிக்கிறார்.

 

90 நிமிடங்கள் நீளமுள்ள இந்த ஆவணப் படத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் மதம் குறித்த பார்வை, சுதந்திரம், இந்தியாவில் புராணங்கள், இந்திய அரசியலில் சாதி நிறுவனமாக்கப்பட்டது, இந்தியாவில் ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களின் நிலை உள்ளிட்ட பலவற்றை ஆவணப்படுத்த திட்டமிடிருக்கிறார்கள்.

 

மேலும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள், பேரணிகள், ஹார்வேர்டு பல்கலைக்கழக பேராசிரியர்களின் பேட்டிகள், தலித் அரசியல் களத்தில் இயங்கும் படைப்பாளிகளின் பேட்டிகள் என பல வருடங்களாக தான் சேகரித்து வைத்தவற்றை எல்லாம் இந்த ஆவணப் படத்தில் இணைத்திருக்கிறார் இயக்குநர் ஜோதி நிஷா.

 

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உருவாகும் இந்த ஆவணப்படம் குறித்து இயக்குநர் ஜோதி நிஷா கூறுகையில், “இந்திய இலக்கியங்கள் மற்றும் சினிமாவில் நாயக கண்ணோட்டத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்டவற்றை இதில் ஆவணப் படுத்த இருக்கிறோம். குறிப்பாக வெகுஜன ஊடகங்கள் பேச மறுத்த வரலாறுகளை பதிவு செய்கிறோம். சமூக அரசியல் சூழல் மாறியிருக்கும் இந்நேரத்தில் "பி.ஆர் அம்பேத்கர் - இன்றும் நாளையும்" ஆவணப்படம் பெண்ணிய நிலைப்பாட்டில் இருந்து சமூகப் புரட்சியையும், பெரும்பான்மை மக்களின் வாழ்விடம் மற்றும் பார்வை குறித்தும் பேச இருக்கிறோம்.” என்றார்.

 

பா.இரஞ்சித் கூறுகையில், “இந்த ஆவணப்படம் நிச்சயம் வரலாற்றை எழுதும், இதில் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி.” என்றார்.