இளையராஜாவுக்கு எதிராக நடக்கும் சதி! - விளக்கம் அளித்த விஷால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷால், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் செயலாளராகவும் இருக்கிறார். சமீபகாலமாக அவருக்கு இரு சங்கங்களிலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
தேர்தலில் போது அறிவித்த எதையும் விஷால் செய்யவில்லை, என்று குற்றம் சாட்டுபவர்கள் அவர் தன்னிச்சையாக செயல்படுவதாகவும் கூறியுள்ளனர். மேலும், சங்க பணத்தை விஷால் முறைகேடு செய்துவிட்டதாக குற்றம் சாட்டுவதோடு, அதை மறைப்பதற்காகவே இளையராஜாவை கெளரவிக்கும் வகையில் ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த விஷால் முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, விஷாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கோஷ்ட்டியினர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தியதோடு, சாவியை அருகே உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்கள்.
இன்று நடைபெற்ற இந்த சம்பவத்தால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் விஷால், ”இளையராஜாவை கெளரவிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை, அதனால் அவருக்காக எடுக்கப்படும் விழாவை தடுத்து நிறுத்தப் பார்க்கிறார்கள். சங்கத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை. கணக்குகள் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். விழாவும் திட்டமிட்டபடி நடக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.