Oct 17, 2017 03:41 AM

இறுதி கட்டத்தில் பிரஷாந்தின் ‘ஜானி’

இறுதி கட்டத்தில் பிரஷாந்தின் ‘ஜானி’

ஸ்டார் மூவிஸ் சார்பில் நடிகர் தியாகராஜன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஜானி’. பிரஷாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படம் மிகுந்த பொருட் செலவில், ஏராளமான முன்னணி நட்சத்திர பாட்டாளங்களோடு உருவாகி வருகிறது.

 

தொடர்ந்து 77 நாட்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள ‘ஜானி’, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் படமாக்கப்பட உள்ளது. பாடல் காட்சிகளை கனடா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

 

இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், இதுவரை காமெடியாக நடித்து வந்த தேவதர்ஷினியும் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், கலைராணி, ஆத்மா, ஜெயக்குமார், டிவி புகழ் சந்தியா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமோகன், சுகந்தன், சுலைமா சேகர், ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.

 

இப்படத்தின் கலை பணியை மிலன் கவனிக்க, ஆக்‌ஷன் காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைத்துள்ளார். சிவா சரவணன் எடிட்டிங்கை கவனிக்க, எம்.வி.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ப.வெற்றிச்செல்வன், ஜீவா சங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.

 

இப்படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்கள் யார்? என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ள படக்குழுவினர், இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அவர்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.

 

இப்படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன், “இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும், இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருப்பது இப்படத்தின் தனி சிறப்பு. நவீன தொழில்நுட்பத்தோடு தயாராகும் இந்த படத்தை மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறேன்.

 

பிரஷாந்தின் கலை உலக பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக ‘ஜானி’ இருக்கும். இந்த வருட இறுதிக்குள் படத்தை வெளியிடுவதற்கான தீவிர பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.” என்றார்.