Apr 14, 2019 11:48 AM

ஷோபனாவின் 15 ஆண்டு கால தவம் கலைந்தது - மலையாள நடிகருடன் இணைகிறார்

ஷோபனாவின் 15 ஆண்டு கால தவம் கலைந்தது - மலையாள நடிகருடன் இணைகிறார்

80 களில் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. தனது சினிமா வாழ்க்கையில் 40 ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கும் ஷோபனா, நடிப்பு மட்டும் இன்றி நாட்டியத்திலும் தனது திறமையை நிரூபித்தவர், தற்போது ஏராளமான மாணவர்களுக்கு நாட்டிய பயிற்சி அளித்து வருகிறார்.

 

நடிப்புக்கு முழுக்கு போட்ட ஷோபனா முழுக்க முழுக்க நாட்டியத்தில் மட்டுமே ஈடுபாடை காட்டி வரும் நிலையில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

 

மலையாள சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக வலம் வரும் சத்யன் அந்திக்காடுவின் மகன் அனூப் சத்யன், இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் தான் ஷோபானா நடிக்கிறார்.

 

பெண்ணை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சுரேஷ் கோபி, ஷோபனா, நஸ்ரியா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

 

2005 ஆம் ஆண்டு வெளியான ‘மகளுக்கு’ என்ற படத்திற்கு பிறகு ஷோபனாவும், சுரேஷ் கோபியும் இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஜினியின் கோச்சடையான், மலையாளப் படம், தெலுங்குப் படம் என்று குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ஷோபனா, ஒரு ஹீரோவுக்கு ஜோடியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் மூலமே நடிக்கிறார். இதன் மூலம், ஷோபனாவின் 15 ஆண்டுகால தவம் கலைந்தது.

 

பாராளுமன்ற தேர்தலில், பா.ஜ.க சார்பில் சுரேஷ் கோபி போட்டியிடுவதால், தேர்தலுக்கு பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது.