Feb 06, 2019 05:34 PM

சினிமா பைனான்சியர்களுக்கான தனி சங்கம் உருவானது!

சினிமா பைனான்சியர்களுக்கான தனி சங்கம் உருவானது!

சினிமாத் துறையில் ஏற்கனவே பல சங்கங்கள் உள்ள நிலையில், இன்று புதிதாக திரைப்படங்களுக்கு பைனான்ஸ் வழங்கும் பைனான்சியர்களுக்கான சங்கம் ஒன்று உதயமாகியுள்ளது.

 

‘தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் (South Indian Film Financiers Association - SIFFA) என்ற பெயரில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக உதயமாகியுள்ள இந்த சங்கத்தின் அறிவிப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

 

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவராக திருப்பூர் சுப்ரமணியம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக சந்திரப்பிரகாஷ் ஜெயின் மற்றும் பொருளாளராக அன்பு செழியன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். செயலாளராக அருண்பாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

ஆர்.பி.செளத்ரி, ஜெஸ்வந்த் பண்டாரி, பங்கஜ் மேத்தா, அபிராமி ராமநாதன், அழகர், ராம், அபினேஷ் இளங்கோவன், டி.சி.இளங்கோவன், பதாம், சீனு ஆகியோர் இச்சங்கத்தில் உள்ளனர். மேலும், தற்போது 20 சினிமா பைனான்சியர்களும் இந்த சங்கத்தில் இணைந்துள்ளனர்.

 

நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம், துணை தலைவர் சந்திரப்பிரகாஷ் ஜெயின், பொருளாளர் அன்பு செழியன், செயலாளர் அருண் பாண்டியன் மற்றும் ராஜா, அபினேஷ் இளங்கோவன், ராம், சங்ஜய் வாத்வா, சுனில் CP ஜெயின் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

 

இன்றைய அறிவிப்பு விழாவில் பேசிய தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், திரையுலகில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் ஒற்றுமையுடன் பேசி, திரைப்படத்துறை நன்கு வளர தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் பாடுபடும், என்று தெரிவித்தார்.

 

தென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கத்தின் முக்கியம்சங்கள்:

 

1. இன்று வரை பைனான்ஸ் செய்து படப்பிடிப்பு முடங்கிக்கிடக்கும் திரைப்படங்கள், எல்லா வேலைகளும் முடிந்து வெளிவராத திரைப்படங்கள் ஆகியவை வெளியே கொண்டுவர சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களை அழைத்து இந்த சங்கம் மூலம் தீர்வு காணப்படும். சுமூகமாக பேசி திரைப்படங்கள் வெளிவர முடிவுகள் எடுக்கப்படும்.

 

2. திரைப்பட நடிகர்கள் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் சம்மதித்து அட்வான்ஸ் பெற்றுக் கொண்ட படங்களை முடிக்காமல் வேறு திரைப்படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து விடுகின்றனர். அதனால் அந்த சம்பந்தப்பட்ட திரைப்படம் முடங்கும் நிலையும், அதிக தாமதமும் ஏற்படுகின்றது. தயாரிப்பாளர்களுக்கு அதிக வட்டி நஷ்டம் ஏற்படுகின்றது. இனிமேல் முதலில் சம்மதித்து ஆரம்பிக்கப்பட்ட படங்களையே முதலில் முடிக்கவேண்டும். அதையும் மீறி அடுத்த படங்களுக்கு தேதியை கொடுக்கும் படங்கள் பைனான்ஸ் கொடுப்பது சம்பந்தமாகவும் அந்த நடிகர் நடிக்கும் மற்ற திரைப்படங்கள் வெளியீடு குறித்தும் எந்தவித ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று முடிவு செய்யப்படும்.

 

3. தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படம் தயாரிக்கும் போது அவர் விருப்பப்படும் பைனான்சியரை அணுகி திரைப்படத்தின் லெட்டர் மூலம் பைனான்ஸ் பெற்றுக்கொண்டபின் மேலும் பைனான்ஸ் பெற மற்ற பைனான்சியரை அணுகும்போது சம்பந்தப்பட்ட முந்தைய பைனான்சியர்கள் அனுமதியின் பெயரில் மட்டுமே மற்றவர்கள் முதலீடு செய்வார்கள் என்று முடிவு செய்யப்படுகின்றது.

 

4. முதல் பைனான்ஸியரின் அனுமதி பெறாமல் லெட்டர் கொடுக்கும் லேப்க்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

 

5. சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்துக்கு பைனான்ஸ் வாங்கி அந்த படத்தை பாதியில் நிறுத்திவிடுவது அல்லது ரிலீஸ் செய்யாமல் அடுத்த படத்தை ஆரம்பித்தால் அவர்களுக்கும் இனிவரும் காலங்களில் ஒத்துழைப்பு கொடுப்பது பற்றி பேசி முடிவுகள் எடுக்கப்படும்.

 

6. சில தயாரிப்பாளர்கள் தாங்கள் வாங்கிய பணங்களை திருப்பி கொடுக்க முடியாத பட்சத்தில், பைனான்சியரை குற்றம் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு இனிமேல் ஒத்துழைப்பு கொடுப்பதை பற்றியும் பேசி முடிவு எடுக்கப்படும். குற்றம் குறை கூறுபவர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.

 

7. திரைப்படத் துறையில் முதலீடு செய்பவர்கள் தயாரிப்பாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், பைனான்சியர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய இவர்கள் திரைப்படத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேற்கண்ட சங்கங்களுடன் நட்புடன் பழகி திரைப்படத்துறை வளர பாடுபடுவோம்.