Jan 20, 2019 06:55 AM

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த சூர்யா, கார்த்தி ரசிகர்கள்!

கஜா புயலால் பாதித்தவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த சூர்யா, கார்த்தி ரசிகர்கள்!

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு பலர் பல விதத்தில் உதவி செய்து வர, தமிழ்த் திரையுலகை சேர்ந்த பலரும் பலவிதத்தில் உதவி செய்து வருகிறார்கள். குறிப்பாக நடிகர், நடிகைகள் லட்சக் கணக்கில் நிவாரண நிதி வழங்கியுள்ளார்கள்.

 

அதேபோல், நடிகர் நடிகைகளின் ரசிகர்களும் தங்களது சொந்த செலவில், நிவாரண உதவிப் பொருட்களை வழங்கி உதவி செய்தார்கள். ஆனால், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோரது ரசிகர்கல் ஒருபடி மேலே சென்று, தங்களது சொந்த செலவில் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்திருக்கிறார்கள்.

 

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்தி குடும்பத்தினர் ரூ.50 லட்சத்தை நிதியாக வழங்கியதை தொடர்ந்து அவரது ரசிகர்களும் அவர்கள் வழியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்கள்.

 

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், செருவா விடுதி கிராமம் அருகே 'தண்டா குளத்துக்கரை' என்ற குக்கிராமத்தில் வசித்த 50 குடும்பங்கள் கஜா புயலில் தங்கள் வீடுகளை முற்றிலும் இழந்து விட்டனர். தலைமுறையாக அதே இடத்தில் வசித்தாலும் மின் இணைப்பு கூட இல்லாத வறுமையான சூழலில் வாழ்ந்த அந்த மக்களுக்கு மீண்டும் வீடு கட்டித் தரும் முயற்சியில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் இறங்கினர்.

 

Khaja

 

நற்பணி இயக்கத் தலைவர் பரமு அவர்கள் நேரடியாக சென்று அந்த இடத்தைப் பார்வையிட்டார். தென்னங்கீற்று வேய்ந்த கூரை வீடுகள் வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன. பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பதினைந்து வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இரண்டு வீடுகள் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சூர்யா - கார்த்தி நற்பணி இயக்கத்தினர் தண்டா குளத்துக்கரை கிராமத்துக்கு நேரடியாக சென்று அந்த மக்களுடன் இணைந்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். இந்த திட்டத்திற்கு செலவாகும் முழு தொகையையும் சூர்யா - கார்த்தி ரசிகர்களே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வார காலத்தில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும். 

 

இது பற்றி தண்டா குளத்துக்கரை கிராமத்தில் வசிக்கும் பாலு கூறும்போது, “ரசிகர்கள் என்றால் இப்படி தான் இருப்பார்கள் என்ற எங்களின் மனநிலையை சூர்யா - கார்த்தி ரசிகர்கள் முற்றிலும் மாற்றிவிட்டனர். புயல் பாதிப்பில் நாங்கள் துவண்டு போய் இருந்தபோது அரிசி, பருப்பு, காய்கறி, சோலார் விளக்கு என அனைத்தையும் வழங்கினர். தற்போது யாரிடம் இருந்தும் ஒரு பைசா வாங்காமல், தங்கள் சொந்தச் செலவில் எங்கள் வீடுகளைக் கட்டித்தருகின்றனர். அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைபட்டுள்ளோம்.” என்றார்.

 

பரமு, வீரமணி, சுந்தர், ஆரி, குணா, ஹரிராஜ், சுரேஷ், வாஸீம்ராஜா, மாரிமுத்து, ஜெகதீஷ், பெருமாள், சரவணன், ரமேஷ் கார்த்திக், ஆனந்த், சதிஷ் ஆகிய ரசிகர் மன்ற நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்கள்.