Feb 26, 2019 08:19 AM

தள்ளிப்போன முகூர்த்த நேரம்! - மதுமிதா கல்யாணத்துல நடந்த குளறுபடி

தள்ளிப்போன முகூர்த்த நேரம்! - மதுமிதா கல்யாணத்துல நடந்த குளறுபடி

உதயநிதியின் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் மதுமிதா. இதற்கு முன்பு பல டிவி தொடர்களில் நடித்தவர், தற்போது தமிழ் சினிமாவின் முக்கியமான காமெடி நடிகையாக வலம் வருகிறார்.

 

மதுமிதாவுக்கும் அவரது உறவினர் ஜோயலுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடந்த திருமணம் என்றாலும், இந்த திருமணத்தில் யார், எப்போது முட்டிக்கொள்வார்களோ! என்ற பயத்திலேயே தான் மணமகளும், மணமகனும் இருந்திருக்கிறார்கள். காரணம், மதுமிதா பள்ளிக்கு சென்ற காலத்தில், அவரது குடும்பத்திற்கும் ஜோயல் குடும்பத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டு பேச்சு வார்த்தையே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். பிறகு ஜோயலுடன் நட்பு ஏற்பட்டு, அவர் இயக்கிய குறும்படங்களில் நடித்து பிறகே அவரையே மதுமிதா காதலிக்க தொடங்கியிருக்கிறார். சில நல்ல உள்ளங்களால் இரு குடும்பங்களும் பகையை மறந்து ஒன்று சேர்ந்தாலும், தற்போதும் எதாவது பிரச்சினை வந்துவிடுமோ, என்று மதுமிதா கலக்கத்திலேயே இருந்திருக்கிறார். அவரது இந்த கலக்கம் அவரது கழுத்தில் ஜோயல் தாலி கட்டும் வரை இருந்திருக்கிறது.

 

இருப்பினும், யார் எப்படி சண்டை போட்டுக் கொண்டாலும், கணவன் - மனைவியாகாமல் மணவறையை விட்டு நாம் இறங்க கூடாது, என்று திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு மதுமிதாவும், ஜோயலும் பேசி முடிவு செய்துவிட்டார்களாம்.

 

இந்த நிலையில், திருமண நாளில் குறித்த முகூர்த்த நேரத்தில் தாலி கட்டுவது தான் வழக்கம் என்றால், மதுமிதா கல்யாணம், முகூர்த்த நேரம் முடிந்த பிறகு தான் நடந்ததாம். இது என்ன கூத்து! என்று அனைவரும் அதிர்ச்சியாக, இது குறித்து மதுமிதாவிடம் கேட்டதற்கு,  ”மூணு மாசத்துக்கு முன்னாடி கல்யாணத்துக்கு நாள், நேரமெல்லாம் குறிச்சப்போ 7.30 - 9 மணினு முகூர்த்த நேரம் குறிச்சாங்க. அப்போ அது நல்ல நேரமா இருந்திருக்கு. ஆனா, கல்யாணத் தேதியில அந்த நேரத்துல `குளிகை' வருதுன்னு சொன்னாங்க. `குளிகை' நேரத்துல கல்யாணம் பண்ணக்கூடாதாம்!. `இதனால முகூர்த்த நேரம் தள்ளிப்போனாலும் பரவாயில்லை'னு சொன்னாங்க. 

 

அமைச்சர் ஜெயக்குமார் சரியா இந்த நேரத்துலதான் அரங்கத்துக்கு வாழ்த்த வந்தார். அவர்கிட்டகூட விஷயத்தைச் சொல்லாம, அவரையும் மணமேடையில ஏற விடாம, கீழே இருந்தபடியே ஆசி வாங்கினோம். பெரியவங்க சிலர் சொன்ன இந்தக் கருத்தையும் புறக்கணிக்க முடியல. அதனாலதான் குறித்த நேரத்துல மணமேடையில ஏற வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஆனா, இந்த விஷயத்தைக்கூட சிலர், `பாருங்க சகுனமே சரியில்லை'னு சொன்னதா எங்க காதுக்கு நியூஸ் வந்தது.” என்று சிரித்தபடி கூறினார்.