நடிப்புக்கு முழுக்கு போடும் உதயநிதி? - அரசியலில் இறங்குகிறார்

அரசியல் குடும்பத்து வாரிசான உதயநிதி ஸ்டாலின், தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்துக்கொண்டிருக்கிறார். தனது முதல் படமான ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ மூலம் மிகப்பெரிய வெற்றிக் கொடுத்த உதயநிதி தற்போது வெற்றி, தேல்வி என்று தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தாலும், காமெடியாக நடிப்பது மட்டும் இன்றி, சீரியஸான வேடங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நீரூபித்து வருகிறார்.
அந்த வகையில், சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், உதயநிதி நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தீவிர அரசியலில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு அவரும் திமுக நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்.
ஆனால், இதை மறுத்திருக்கும் உதயநிதி, இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில், “திமுக நிகழ்வுகளில் என்னை அழைப்பதற்கு காரணம், நான் ஒரு நடிகன் என்பதாலும், திமுக பத்திரிகையின் மேலாளர் என்பதாலும் தான். நான் நடிப்பை முழுவதுமாக நிறுத்தப்போவதில்லை. நடிப்பதை குறைத்துக் கொள்ளப் போகிறேன். ஆண்டுக்கு ஒரு படத்தில் மட்டும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதே சமயம், அரசியலில் தீவிரமாகவும் ஈடுபட போகிறேன். அதற்காக எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட போவதாக நினைக்க வேண்டாம். எந்த சூழலிலும், எம்.எல்.ஏ மற்றும் வேறு எந்த பதவிக்காகவும் நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன்.” என்று கூறியிருக்கிறார்.
ஆக, நடிப்பு மற்றும் அரசியல் என இரண்டிலும் உதயநிதி பயணிக்க போவது உறுதியாகிவிட்டது.