Dec 24, 2018 07:04 PM

முதல்வரை சந்திக்கும் முயற்சியில் விஷால்!

முதல்வரை சந்திக்கும் முயற்சியில் விஷால்!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் நடிகர் விஷாலுக்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர் சொன்ன எதையும் செய்யவில்லை, என்று குற்றம் சாட்டி வருபவர்கள் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதையடுத்து பூட்டை திறக்க முயன்ற விஷால் கைது செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு விஷால் விடுவிக்கப்பட்டதும், இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, பூட்டு போட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பூட்டை திறக்கவும் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பூட்டு திறக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள சங்க அலுவகத்தில் விஷால் தலைமையில் இன்று நடந்தது.

 

இதில் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். இந்த செயற்குழுவில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சங்க துணைத்தலைவர் கவுதம் மேனனுக்கு பதிலாக பார்த்திபன் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சங்கத்தை பூட்டு போட்ட உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், இளையராஜா நிகழ்ச்சி தொடர்பாக முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டிருக்கும் விஷால், விரைவில் அவரை சந்திப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.