Oct 01, 2017 12:58 PM

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தமிழில் அறிமுகமாகும் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு தமிழில் அறிமுகமாகும் 'குறள் 388'

பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனும், தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவருமான விஷ்ணு மஞ்சு, ‘குறள் 388’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக சுரபி நடிக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், போசானி கிருஷ்ண முரளி, நாசர் பிரகதி, முனீஸ்காந்த் தலைவாசல் விஜய், பிரமானந்தம் சுப்ரீத் ஸ்ரவன், எல்.பி.ஸ்ரீராம் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் தமிழில் ‘குறள் 388’ என்ற தலைப்பிலும், தெலுங்கில் ‘வோட்டர்’ என்ற தலைப்பிலும் வெளியாக உள்ளது.

 

‘கடைசி பெஞ்ச் கார்த்தி’, ‘காட்சி நேரம்’ ஆகிய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் ராமா ரீல்ஸ் பட நிறுவனம் சார்பாக ஜான் சுதீர்குமார் புதோடோ தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்க, வசனத்தை பத்திரிகையாளர் ரவிசங்கர் எழுதுகிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் கிரம் மன்னி கலையை நிர்மாணிக்க, கிரண் தனமாலா இணை தயாரிப்பு பணியை கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை எழுதி இயக்கும் ஜி.எஸ்.கார்த்தி படம் குறித்து கூறுகையில், “உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஏழு வார்த்தைகளே கொண்ட திருக்குறளின் மூலம் சொல்லப் படாத கருத்துக்கள் எதுவும் இல்லை. ”முறை செய்து காப்பாற்றும் மன்னவன்  மக்கட்கு இறையென்று வைக்கப்படும்” என்ற 388 வது குறளின் கருத்துக்கள் தான் படத்தின் கதைக் கரு. பரபரப்பான இன்றைய கால கட்டத்துக்கு தேவையான கருத்தை உள்ளடக்கிய படமாக இப்படம் உருவாகிறது. ”இந்த படம் எனது தமிழ் திரையுலகப் பிரவேசத்துக்கு சரியான படமாக இருக்கும். இதில் காதல் மோதல் காமெடி எல்லாம் இருக்கு, என்று நம்பிக்கையோடு விஷ்ணு மஞ்சு சொல்லியிருக்கிறார்.” என்றார்.