Mar 15, 2019 06:21 AM

யோகி பாபு பேயாக நடிக்கும் ‘பட்டிபுலம்’!

யோகி பாபு பேயாக நடிக்கும் ‘பட்டிபுலம்’!

சந்திரா மீரியா விஷன் பட நிறுவனம் சார்பில் திருமுருகன் தயாரிக்கும் படம் ‘பட்டிபுலம்’. யோகி பாபு பேய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் இன்னொரு நாயகனாக வீரசமர் நடிக்கிறார். கதாநாயகியாக அமிதாராவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே ‘தற்காப்பு’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேரன்ராஜ், சூப்பர் குட் சுப்ரமணி ஆகியொர் நடிக்கிறார்கள்.

 

ஆர்.கே.வர்மா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு வல்லவன் இசையமைக்க, ஆர்.ஜி.ஆனந்த் எடிட்டிங் செய்கிறார். வீரசமர் கலையை நிர்மாணிக்க, விஜய் ரக்‌ஷித் நடனம் அமைக்கிறார். மகேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, மா.கா.பா.ஆனந்த், வல்லவன், கானா ராஜேஷ், கானா வினோத் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். தயாரிப்பு மேற்பார்வையை அயன்புரம் ராஜு கவனிக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுரேஷ் என்பவர் இயக்குகிறார். இவர் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணியாற்றியவர்.

 

படம் குறித்து இயக்குநர் சுரேஷ் கூறுகையில், “நான் ஷக்தி சிதம்பரத்திடம் உதவியாளராக பணி புரிந்ததால் காமெடியை எப்படி உபயோகம் செய்தால், மக்களிடம் பாராட்டை பெறலாம் என்பதை கற்றுக் கொண்டேன். அந்த பார்முலாபடி யோகி பாபுவை இந்த பட்டிபுலத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அஞ்சு நிமிஷம், பத்து நிமிஷம் இல்லை, படத்தில் யோகி பாபு ஒரு மணி நேரம் வருகிறார். அந்த ஒரு மணி நேரத்திற்கும் அதகளப்படுத்தி இருக்கிறார்.

 

கிழக்கு கடற்கரை சாலையில் பட்டிபுலம் என்ற ஊர் இருக்கு, அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதும், அதனால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது, ஒரு குடும்பம் எப்படி பாதிக்கப்படுகிறது, என்பது தான் கதை. இதை நகைச்சுவையாகவும், பரபரப்பாகவும் சொல்லி இருக்கிறோம்.

 

பேய் என்ற கதாபாத்திரத்தில் யோகி பாபு ரகளை செய்திருக்கும் இந்த ‘பட்டிபுலம்’ இம்மாதம் 22 ஆம் தேதி வெளியாகிறது.