May 23, 2019 04:57 PM

’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) விமர்சனம்

75254b66725f98771f85890a30af2e37.jpg

Casting : Oviya, Sanjay, Ravi Mariya, Radharavi, Aruldoss, Meera Krishnan

Directed By : Rajadurai

Music By : Srikanth Deva

Produced By : Velammal Cine Creations Madurai Selvam

 

ஓவியா, அறிமுக ஹீரோ சஞ்செய், ராதாரவி, சரவணன் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) படம் எப்படி என்பதை பார்ப்போம்.

 

ஹீரோ சஞ்செய் எம்.பி.ஏ படித்துவிட்டு வேலைக்கு போகாமல், சொந்தமாக தொழில் செய்து கோடீஸ்வரராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். அதுவரை வீட்டில் திட்டு வாங்கிக்கொண்டு, நண்பர்களுடன் சுற்றிக்கொண்டு அப்படியே ஹீரோயின் ஓவியாவை காதலித்துக் கொண்டும் இருக்கிறார்.

 

இதற்கிடையே, சிலரால் ஏமாற்றப்பட்டு பணத்தை இழக்கும் சஞ்ஜெய், ராதாரவியுடன் இணைந்து பேராசை உள்ளவர்களை ஏமாற்றி கோடி கோடியாக பணம் சம்பாதிக்கிறார். பிறகு அவரால் ஏமாந்தவர்கள் மூலம் அவருக்கு பெரிய பிரச்சினைகள் வர, அதில் இருந்து மீண்டு வந்தாரா இல்லையா, தான் நினைத்தது போல பெரிய தொழிலதிபர் ஆனாரா இல்லையா, என்பது தான் ’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) படத்தின் மீதிக்கதை.

 

உலகம் தொழில்நுட்பத்தில் பெரிய வளர்ச்சியடைந்தாலும், படித்து பெரிய பதவியில் இருந்தாலும், பேராசை என்பது மனிதர்களை எப்படி முட்டாளாக்குகின்றன என்பதை காதல், காமெடி, ஆக்‌ஷன் ஆகியவற்றை கலந்து கமர்ஷியல் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராஜதுரை..

 

ஹீரோவாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் சஞ்ஜெய் நடனம் மற்றும் நடிப்பு இரண்டிலுமே பாஸ் செய்யும் அளவுக்கு பக்காவாக தயாராகியிருக்கிறார். அப்படியே அவரது உடம்பிலும் சற்று கவனம் செலுத்தினால் சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு.

 

ஹீரோயினாக நடித்திருக்கும் ஓவியா, தனது சுட்டித்தனமான நடிப்பால் கவர்கிறார். கதையுடன் ரொம்ப ஓட்டவில்லை என்றாலும், பாடல் காட்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக்கொள்கிறார்.

 

Oviyava Vitta Yaru Movie Review

 

அண்ணாச்சியாக வரும் சரவணன் ஓவியாவை சீரியஸாக காதலித்தாலும், அவரது காதல் எப்பிசோட் முழுவதும் காமெடி டைமாக நம்மை சிரிக்க வைக்கிறது. மேலும், சுவாமிநாதன், பவர் ஸ்டார் ஹீரோவின் நண்பர்களாக வரும் பரத்ரவி, சந்தோஷ் ஆகியோரது காமெடியும் சிரிக்க வைக்கிறது.

 

பாம்பு பரமசிவம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, தனது பணியை எப்போதும் போல சிறப்பாக செய்திருப்பதோடு, ‘கவுரவத்தை பார்த்தால் வேலைய பார்க்க மாட்டேன், லாபம் என்று வந்துட்டா கவுரவம் பார்க்க மாட்டேன்” என்ற பஜ்ச் வசனம் பேசி மத்தவங்களை ஏமாற்றிவிட்டு, அவங்க கிட்டயே கூலாக பேசுவது என்று தனது கதாபாத்திரம் மூலம் படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

 

ஹீரோவின் பெற்றோர்களாக நடித்திருக்கும் இயக்குநர் மனோஜ்குமார், மீரா கிருஷ்ணன் ஆகியோர் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கலெக்டராக வந்து ஏமாறும் அருள்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டராக வந்து ஏமாறும் ரவி மரியா என்று படத்தில் நடித்த அனைவரும் கதாபாத்திரத்திற்கு கஞ்சிதமாக பொருந்தியுள்ளனர்.

 

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைப்பதோடு, ஆடவும் வைக்கிறது. இ.கே.நாகராஜின் ஒளிப்பதிவு கதையுடனேயே பயணித்திருக்கிறது.

 

ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்துடன் முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவைப் படமாக இருந்தாலும், படத்தில் மிகப்பெரிய மெசஜை ரொம்ப சாதாரணமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜதுரை, எந்த நடிகரை எப்படி பயன்படுத்துவது, என்பதையும், கருத்து சொன்னாலும் அதை காமெடியுடன் சொன்னால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார்.

 

சாதாரண கதையாக இருந்தாலும் தான் சொல்ல வந்ததில் எந்தவித குழப்பமும் இல்லாமல் முழுக்க முழுக்க ஜனரஞ்சகமான முறையில் ரசிகர்களுக்கு திகட்டாத இனிப்பாக இப்படத்தின் திரைக்கதையையும், காட்சிகளையும் அமைத்திருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ’ஓவியாவ விட்டா யாரு’ (சீனி) திரைப்படம் 100 சதவீதம் பொழுதுபோக்குக்கு கியாரண்டி

 

ரேட்டிங் 3/5