Nov 18, 2023 04:54 AM

‘செவ்வாய்கிழமை’ திரைப்பட விமர்சனம்

6939080483d9f82e61f467933da342b7.jpg

Casting : Payal Rajput, Sritej, Ajmal Ameer, Chaitanya Krishna, Ajay Ghosh, Laxman

Directed By : Ajay Bhupathi

Music By : B Ajaneesh Loknath

Produced By : Saikumar Yadavilli

 

மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் மர்மமான முறையில் மக்கள் இறக்கிறார்கள். அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்களை பற்றிய சில வாசகங்கள் எழுதப்பட்டிருக்கிறது. அதுமட்டும் இன்றி இந்த மர்ம மரணங்கள் சரியாக செவ்வாய்கிழமையில் மட்டுமே நடக்கிறது. மர்ம மரணத்தின் பின்னணியை கண்டுபிடிப்பதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்திதா அந்த ஊருக்கு வர, அந்த ஊரில் நடக்கும் மர்ம மரணங்களுக்கு இறந்துபோன ஷைலு தான் காரணம் என்று மருத்துவர் ஒருவர் சொல்கிறார். யார் அந்த ஷைலு?, அவருக்கும் இந்த மரணங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

கதையின் நாயகியாக ஷைலு என்ற கதாபாத்திரத்தில் பயல் ராஜ்புத் நடித்திருக்கிறார். இப்படி ஒரு வேடமா! என்று நடிகைகள் அதிர்ச்சியாகும் ஒரு வேடத்தில் மிக தைரியமாக நடித்திருக்கும் பயல் ராஜ்புத், இரண்டாம் பாதி படம் முழுவதையும் தன் தோளில் சுமந்திருக்கிறார். மனதளவில் மட்டும் இன்றி, காமம் சார்ந்த நோயல் உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலிமிகுந்த வாழ்க்கையை தனது நடிப்பு மூலம் மிக சரியாக பிரதிபலித்திருக்கிறார். அதிலும், அதுபோன்ற காட்சிகளில் அவர் நடிக்கும் போது பார்வையாளர்களுக்கு அவர் மீது இரக்ககும், பரிதாபமும் ஏற்படும் வகையில் கதாபாத்திரத்தை புரிந்துக்கொண்டு நடித்திருக்கிறார்.

 

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, அழுத்தமான வேடத்தில் பலம் வாய்ந்த பெண் அதிகாரியை பிரபதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார்.

 

ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்‌ஷ்மன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவுக்கு பரிட்சயம் இல்லாத முகங்களாக இருந்தாலும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள்.

 

எழுதி இயக்கியிருக்கும் அஜய் பூபதி, திரைக்கதை மற்றும் மேக்கிங் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார்.  முதல் பாதியில் இடம்பெறும் திகில் காட்சிகள் மிரட்டலாக இருப்பதோடு, அறிமுக காட்சியில் காட்டப்படும் சிறுவன் மற்றும் சிறுமிக்கு என்ன ஆனது? என்ற கேள்வியோடு படம் சுவாரஸ்யமாக நகர, இடைவேளையின் போது சிறுமி பெரியவளாக இருக்கும் வேடத்தை காட்டும் இடைவேளைப் பகுதி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

 

அதே சமயம், இரண்டாம் பாதி முழுவதும் ஷைலுக்கு என்ன ஆனது? என்பதை விளக்கும் இயக்குநர் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அதுபோன்ற ஒரு பாதிப்பை மருத்துவ ரீதியாக பார்க்காமல் இந்த சமூகம் எப்படி பார்க்கிறது? என்று சொல்லும் காட்சிகள் திரைக்கதைக்கு பலமாக அமைந்தாலும், தொடர் மரணங்களுக்கான பின்னணியை சொல்லும் காட்சிகள் வழக்கமான பாதையில் பயணிப்பது போல் இருப்பதோடு, படத்திற்கு மைனஸாகவும் அமைந்திருக்கிறது. 

 

ஆனால், அந்த மைனஸ்கள் அனைத்தையும் தனது இசை மூலம் பிளஸாக மாற்றியிருக்கிறார் இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத். அவருடைய பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு மட்டும் ஒன்றி ஒட்டு மொத்த படத்திற்கும் உயிர் கொடுத்திருக்கிறது.

 

ஒளிப்பதிவாளர் தசரதி சிவேந்த்ராவின் ஒளிப்பதிவில் திகில் காட்சிகள் அனைத்தும் பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் மிக நுட்பமாக கையாண்டிருப்பவர், இருள் சூழ்ந்த பகுதிகளை காட்டியே பல இடங்களில் பார்வையாளர்களுக்கு பயத்தை காட்டிவிடுகிறார்.

 

குல்லப்பள்ளி மாதவகுமாரின் படத்தொகுப்பு படத்தின் கதையை மிக தெளிவாக கடத்துகிறது. தஜுதின் சையத் மற்றும் ராகவ்  வசனம் எளிமையாக இருந்தாலும் திரைக்கதைக்கு வலிமை சேர்த்திருக்கிறது.

 

முதல் பாதியில் திகில் காட்சிகளை வைத்து பேய் படம் பார்க்கும் உணர்வை கொடுக்கும் இயக்குநர் அஜய் பூபதி, இரண்டாம் பாதியில் வழக்கமான பாணியில் கதை சொல்லாமல் திரைக்கதையை வித்தியாசமான முறையில் நகர்த்தி செல்வதோடு, படம் க்ளைமாக்ஸை நோக்கி பயணிக்கும் போது,  இது பேய் படமும் இல்லை என்ற ரீதியில் காட்சிகளை வடிவமைத்திருப்பவர், இறுதியில் மக்களுக்கு நல்ல மெசஜை சொல்லி படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார்.

 

திகில் அல்லது க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என எந்த ஜானராக இருந்தாலும் மேக்கிங் மிரட்டலாக இருந்தால் ரசிகர்களை கதையோடு கட்டுப்போட்டு பயணிக்க வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ‘செவ்வாய்கிழமை’.

 

ரேட்டிங் 3.2/5